சென்னை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் பவுன் ஒன்றுக்கு ரூ.1,120 ஏற்றம் கண்டுள்ளது. இதனால் ஒரு பவுன் ரூ.74,320-க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கம் நேற்று ஒரு பவுன் ரூ.73,200 என இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கும் நடைமுறை குறித்த அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பின்னர் தங்கம் விலை உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது. தற்போது ஆடி மாதம் என்பதால் தமிழகத்தில் திருமணம் மாதிரியான சுப நிகழ்ச்சிகள் அதிகம் திட்டமிடப்படாத நிலையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதும் கவனிக்தக்கது. மேலும், வரும் ஆவணி மாத முகூர்த்த நாட்களில் தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருப்பதாக சாமானியர்கள் கருதுகின்றனர்.
சென்னையில் இன்று (சனிக்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,290-க்கு விற்பனையாகிறது. அதேபோல் பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.73,200-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
24 காரட் தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு ரூ.153 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,135-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.125 என விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,680-க்கு விற்பனை ஆகிறது.