ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் அனைத்து பொருள்களுக்கும் கூடுதலாக வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
இந்திய பொருள்கள் மீதான வரியை இறுதிசெய்து இன்று(ஜூலை 30) அறிவித்துள்ளார் டிரம்ப். அதன்படி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீதம் வரியும் அத்துடன் அபராதமாக கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் இந்த நடவடிக்கை அமலாகிறது.
ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதால் அபராதமாக கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ரஷியாவிடமிருந்து எரிபொருள், ராணுவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதே மேற்கண்ட கூடுதல் வரி விதிப்புக்கு வித்திட்டுள்ளது.
இது குறித்து ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் டிரம்ப் பதிவிட்டிருப்பதாவது: “இந்தியா எங்களது நண்பன். ஆயினும், இந்தியா விதித்துள்ள வரி மிக அதிகம், உலகளவில் அதிகம் எனலாம்! மேலும், பணப்பரிவர்த்தனையற்ற வர்த்தக முறையில் மிக மிக கடினமான தடைகளைக் கொண்டுள்ள நாடாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ஆக. 1 முதல் இந்தியாவுக்கு 25% வரி: டிரம்ப் அறிவிப்பு