மும்பையில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மாலை 6.24 முதல் 6.35 வரையிலான 11 நிமிடங்களில் 7 குண்டுகள் அடுத்தடுத்து ரயில்களில் வெடித்தன. இந்த கோர சம்பவத்தில், மொத்தம் 189 நபர்கள் பலியாகினர். மேலும், சுமார் 800 நபர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 12 பேரை மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் என கீழமை நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
அதில், கமல் அன்சாரி, பைசல் ஷேக், எஸ்தேஷாம் சித்திக், நவீத் கான் மற்றும் ஆசிப் பஷீர் கான் ஆகிய ஐந்து குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. முகமது அலி, முகமது சாஜித் அன்சாரி, மஜித் ஷாஃபி, டாக்டர் தன்வீர் அன்சாரி, முஸாமில் ஷேக், ஜமீர் ஷேக் மற்றும் சோஹைல் ஷேக் ஆகிய ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் நீதிபதி ஷியாம் சந்தக் அமர்வு, வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 12 பேரையும் விடுவித்து கடந்த 21ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு “முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது” என்றும் உயர் நீதிமன்றம் கூறியது.
“குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் செய்தார் என்பதை நம்புவது கடினம். எனவே, அவர்களின் தண்டனை ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவித்த நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வேறு எந்த வழக்கிலும் இல்லை என்றால் உடனடியாக விடுதலை செய்யப்படலாம் எனவும் தீர்ப்பில் தெரிவித்தது.
இதனை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த 22ஆம் தேதி மேல்முறையீடு செய்தது. மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, மேல்முறையீட்டு மனுவை அவசர மனுவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வில் கோரிக்கை வைத்தார்.
அவரின் கோரிக்கை ஏற்கப்பட்டு, இன்று அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் என். கோட்டீஷ்வர் சிங் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மகாராஷ்டிரா அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மகாராஷ்டிரா உயர் நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பில், திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் மகாராஷ்டிரா சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள விசாரணைகளைப் பாதிக்கும் வகையிலான கருத்துகள் உள்ளன. எனவே உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் மகாராஷ்டிரா சட்டத்தின் வழக்குகளை விசாரிக்கும் விசாரணை நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றத் தீர்ப்பை முன்னுதாரணமாகக் கருதாது என்று தெரிவித்தனர். மேலும், விடுவிக்கப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அவர்கள் மீண்டும் சிறைக்குத் திரும்பத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது.
July 24, 2025 3:16 PM IST
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு; 12 பேரை விடுவித்த உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை

