Last Updated:
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் மோடி செல்ல உள்ள நிலையில், அவரது ஹெலிகாப்டர் இறங்குவதற்கான இடம் திடீரென்று மாற்றப்பட்டது.
2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்றிரவு சுமார் 8 மணி அளவில் மாலத்தீவில் இருந்து பிரதமர் மோடி தூத்துக்குடி வருகிறார். தூத்துக்குடி விமானநிலையத்தில் 451 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பின்னர், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் வடக்கு பகுதியில் சரக்கு கப்பல் நிறுத்துமிடத்தை பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.
இதே போன்று, தூத்துக்குடி துறைமுக சாலை பிரிவின் 6 வழிச்சாலை, சேத்தியாத்தோப்பு-சோழபுரம் பிரிவின் நான்கு வழிச்சாலையையும் மோடி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளார். ஒட்டுமொத்தமாக 4 ஆயிரத்து 900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், தொடங்கி வைத்தல், நாட்டுக்கு அர்ப்பணித்தல் உள்ளிட்ட பணிகளை பிரதமர் மேற்கொள்கிறார். இந்நிகழ்ச்சிக்காக தூத்துக்குடி விமானநிலையத்தில் சுமார் பத்தாயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பிரமாண்ட இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கங்கை கொண்ட சோழபுரத்தின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை பங்கேற்கிறார். இதனை ஒட்டி, திருச்சி விமானநிலையத்தில் இருந்து பிரதமர் மோடி வரும் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு பள்ளி மைதானம் ஒன்றில் ஹெலிபேட் அமைக்கப்பட்டது. இதற்கான ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில், பாதுகாப்பு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, கோயிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோழகங்கம் என்ற பொன்னேரியில் புதிதாக ஹெலிபேட் அமைக்கப்பட்டது. இதில் ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகையும் நடைபெற்றது. இங்கிருந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி கோயிலுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயிலில், பிரதமர் மோடி முன்பு பன்னிரு திருமுறைகளில் 9 ஆவது திருமுறையை ஓதுவார்கள் ஓதுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பதாவது திருமுறை என்பது கருவூர் தேவர் பாடிய திருஇசைப்பாவாகும். இவர், கங்கை கொண்ட சோழீஸ்வரரை பற்றி 10 பாடல்களை பாடியுள்ளார். ஒவ்வொரு பாடலும் கங்கை கொண்ட சோளேச்சரத் தானே என்று முடிவது குறிப்பிடத்தக்கது.
July 26, 2025 4:23 PM IST


