பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்டவற்றை குறித்து விவாதிக்க தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், ஜூலை 28ஆம் தேதி மக்களவையிலும், 29ஆம் தேதி மாநிலங்களவையிலும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு தரப்பில் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவையில் 28ஆம் தேதி நடத்தப்படும் விவாதத்தில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விவாதத்தை துவங்கி வைக்கிறார். இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாஜக எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், நிஷிகாந்த் தூபே உள்ளிட்டோரும் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
On Monday, 28th July, Defence Minister Rajnath Singh will initiate the discussion on Operation Sindoor in the Lok Sabha. Other ministers participating in the discussion include Home Minister Amit Shah and Foreign Minister S Jaishankar. BJP MPs Anurag Thakur and Nishikant Dubey… pic.twitter.com/RVcIJc7nHa
— ANI (@ANI) July 25, 2025
அதேபோல், 29ஆம் தேதி மாநிலங்களவையில் நடைபெறும் விவாதத்திலும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இதிலும், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
இரு அவைகளிலும் மொத்தம் 16 மணி நேரம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக பலியாகினர். இதனை அடுத்து, இந்திய அரசு, பாகிஸ்தான் மீது ராஜாங்க ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதனையடுத்து, பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் 9 நிலைகளைக் குறிவைத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தது. இந்தியாவின் தாக்குதலைத் தொடர்ந்து, எல்லை கிராமங்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதனை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில், இந்திய விமானங்களும் சேதமடைந்ததாகவும், எல்லை மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை எழுப்பின. எனவே இது குறித்து விவாதிக்க, சிறப்பு நாடாளுமன்றத்தைக் கூட்டவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதேபோல், இரு நாடுகளின் இடையேயும் தொடர்ந்து மோதல் வெடித்தது. இதனை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தெரிவித்துவருகிறார். ஆனால், இந்தியா தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவித்து வரப்படுகிறது.
தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்றுவரும் சூழலில், ஆபரேஷன் சிந்தூர், பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவருகின்றன. இதனால், கூட்டம் துவங்கிய கடந்த 21ஆம் தேதி முதல் தொடர்ந்து இரு அவைகளும் முடங்கி வருகின்றன.
இந்நிலையில், வரும் திங்கள் கிழமை (28ஆம் தேதி) மக்களவையிலும், 29ஆம் தேதி மாநிலங்களவையிலும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க இருப்பதாகவும், இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
July 25, 2025 3:59 PM IST
எதிர்க்கட்சிகளுக்கு தேதி குறித்த மத்திய அரசு… விவாதத்திற்கு வரும் ஆபரேஷன் சிந்தூர்; நாடாளுமன்றத்தில் பேசப்போகும் பிரதமர் மோடி?

