Last Updated:
தா மோன் தாம் கோயில் மற்றும் 817 கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை உரிமை கொள்வதில் நீண்டகாலமாக சிக்கல் நிலவுகிறது.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலை சொந்தம் கொண்டாடுவதில் தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்டுள்ள மோதலால் தென்கிழக்கு ஆசியாவில் பதற்றம் நிலவுகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பகுதியான Preah Vihear-ல் உள்ள தா மோன் தாம் கோயில் மற்றும் 817 கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை உரிமை கொள்வதில் நீண்டகாலமாக சிக்கல் நிலவுகிறது. ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் கம்போடியாவுக்கு சொந்தமானது என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதற்கு பாரம்பரிய அந்தஸ்து கோரி யுனெஸ்கோவை கம்போடிய அரசு அணுகியது.
இதனால் தாய்லாந்தில் போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில், கடந்த மே மாதம் இருநாடுகளுக்கும் இடையே நடந்த மோதலில் கம்போடியா ராணுவ வீரர் கொல்லப்பட்டார். இதனால் தாய்லாந்து உடனான உறவை கம்போடியா முறித்துக் கொண்டது. இருப்பினும் அவ்வப்போது இருநாடுகளும் எல்லையில் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாங்காக் அடுத்த ட பிரோஃம் என்ற இடத்தில் அத்துமீறி கம்போடியா தாக்குதல் நடத்தியதாக தாய்லாந்து குற்றஞ்சாட்டியது. இதனால் எல்லையில் இரு நாட்டு வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர் . சர்ச்சைக்குரிய எல்லையில் உள்ள கம்போடியாவின் ராணுவ இலக்கை தாய்லாந்தின் எஃப் 16 போர் விமானம் அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கம்போடியா பீரங்கி மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்கியதில் 8 வயது சிறுவன், ராணுவ வீரர் உள்பட 11 பேர் கொல்லப்பட்டதாக தாய்லாந்து குற்றஞ்சாட்டி உள்ளது.
இரு நாடுகளின் எல்லையோர கிராமங்கள் காலி செய்யப்பட்டு ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – காஸா என அடுத்தடுத்த போர்களால் உலகம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், கம்போடியா – தாய்லாந்து இடையிலான பதற்றம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
July 25, 2025 7:51 AM IST


