Last Updated:
அடுத்த குடியரசு துணைத் தலைவர் பாஜகவிலிருந்து தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் அடுத்த குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர், பாஜகவிலிருந்து தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணைக் குடியரசுத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், அண்மையில் பதவி விலகிய நிலையில் அவரது இடம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய குடியரசு துணைத் தலைவரை அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்வு செய்ய வேண்டும் என விதிகள் உள்ளதால் வரும் செப்டம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இப்பதவிக்கு பாஜகவினர் மட்டுமல்லாமல், பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், அவரது ஜேடியூ கட்சியைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங் மற்றும் தெலுங்கு தேச கட்சியினரின் பெயர்களும் அடிபட்டு வந்தன.
அதுமட்டுமின்றி, சசி தரூரை துணைக் குடியரசுத் தலைவராக்கி காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ள தலைவர்களை பாஜக உள்ளிழுக்கக்கூடும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அடுத்த குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர், நிச்சயமாக பாஜகவிலிருந்தே தேர்வு செய்யப்படவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அவர், பாஜகவுடன் சித்தாந்த ரீதியான இணக்கத்தையும், நாடாளுமன்ற நடைமுறைகளில் விரிவான அனுபவத்தையும் கொண்டவராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் முடிந்த பின்னர் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர தினத்திற்குள் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
July 24, 2025 3:49 PM IST


