உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள தூதரகம் மூலம் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்புவது, நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு வழி வகை செய்து கொடுப்பதாக கூறப்பட்டுள்ளது. இதை நம்பி ஏராளமானோர் தூதரகத்தை அணுகி பணத்தை கட்டி ஏமாந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து புகார்கள் எழுந்ததும் உத்தரப் பிரதேச சிறப்பு காவல் படையினர் சம்பந்தப்பட்ட தூதரகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இரண்டு மாடி கட்டடத்தில் இங்கிய தூதரகரத்தின் முன்பு, ஆடி, மெர்சிடிஸ், பென்ஸ் உள்ளிட்ட விலை உயர்ந்த சொகுசு கார்கள் அணிவகுத்துள்ளன. அவற்றில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர்களுக்கான நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளன.
அதைக் கண்டு ஆச்சரியமடைந்த அதிகாரிகள் உள்ளே சென்று ஆய்வு செய்ததில், அங்கிருந்த அனைத்தும் போலி என்பதை தெரிந்து ஆடிப்போயுள்ளனர். பின்னர், மெகா மோசடிக்கு மாஸ்டர் மைண்டாக இருந்த ஹர்ஸ்வர்தன் ஜெயின் என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் இரண்டு அடுக்குமாடி கொண்ட கட்டடத்தை வாடகைக்கு வாங்கி, அதை பல்வேறு நவீன வசதிகள் கொண்ட தூதரகம் போன்று மாற்றியுள்ளார். எப்போதும், வாசலில் ஆடி, பென்ஸ் போன்ற சொகுசு கார்களை நிறுத்தி வைத்து பில்டப்பை மெயின்டைன் பண்ணியுள்ளார். அத்துடன், இல்லாத ஊருக்கு பெயர் வைப்பது போன்று ‘வெஸ்டார்டிகா’ நாட்டின் தூதுவர் என அறிமுகம் செய்து சொகுசு கார்களில் ஊருக்குள் உலா வந்துள்ளார்.
மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரபலங்களுடன் சேர்ந்து இருப்பது போன்று போட்டோக்களை மார்பிங் செய்துள்ளார். அந்த போட்டோக்களை அரசு அதிகாரிகளிடம் காட்டி, தனக்கு ஆக வேண்டிய காரியங்களையம் சாதித்துள்ளார். இவர் உண்மையான தூதர் தான் என நம்பியவர்களிடம், வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
ஒருபடி மேலே போய், பணம் படைத்தவர்களை குறிவைத்து, அவர்களுக்கு வெளிநாட்டில் தொழில் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் கூறி கோடிகளை ஏப்பம் விட்டுள்ளார். இதையடுத்து, ஹர்ஸ்வர்தன் ஜெயினை போலீசார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து தூதர்களுக்கான சிறப்பு நம்பர் பிளேட் உடன் இருந்து நான்கு சொகுசு கார்கள், 12 நாடுகளுக்கான பாஸ்போர்ட், வெளியுறவு அமைச்சகத்தின் முத்திரைகள் கொண்ட ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அத்துடன், 44 லட்சம் ரூபாய் ரொக்கம், வெளிநாட்டு கரன்சிகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடியில் ஹர்ஸ்வர்தனுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார், யார், இந்த கும்பலுக்குப் பின்னால் உள்ள முக்கியப்புள்ளி யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலி காவல் நிலையம், போலி நீதிமன்றம் வரிசையில், தற்போது உத்தர பிரதேசத்தில் போலி தூதரகம் அமைத்து, குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் உடன் இருப்பது போன்ற போட்டோக்களை காட்டி, பலரிடம் மோசடி செய்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
July 23, 2025 5:49 PM IST

