நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், கூட்டம் துவங்கியது முதல் இன்று வரை தொடர்ந்து மூன்று நாட்களும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரு அவைகளும் முழு நாளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும், பிகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை மேற்கொண்டு வருவது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு இரு அவைகளும் நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டன.
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் ஏன் நாடாளுமன்றத்தில் அது விவாதிக்கப்படுவதில்லை என மத்திய அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தரப்பில் பேசும்போது, அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால், தேர்தல் ஆணையம் என்பது ஒரு சுதந்திரமான தன்னாட்சி அமைப்பு. எனவே அரசு எப்படி தேர்தல் ஆணையத்தின் சார்பாக அவையில் பேச முடியும்? எதிர்க்கட்சிகள் இதனை புரிந்துகொள்ள வேண்டும் என சொல்லப்படுகிறது.
காலை மாநிலங்களவை 11 மணிக்கு கூடியதும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் அவையை நடத்த முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது. பிறகு 2 மணிக்கு அவை கூடியது. அப்போது துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனோவால், கடல் வழியாக பொருட்களை கொண்டு செல்வதற்கான மசோதா 2025-ஐ விவாதம் மற்றும் நிறைவேற்றத்திற்காக முன்மொழிந்தார்.
அதிமுக எம்.பி. எம். தம்பிதுரை மசோதா மீது பேச எழுந்து நின்றபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி மீண்டும் முழக்கமிட்டனர்.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைமுறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதனால் மீண்டும் அவையில் கோஷம் எழவே அவை நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம், டெல்லியில் குடிசைகள் இடிப்பது, பிற மாநிலங்களில் வங்காளத்திலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் விமானப் பாதுகாப்பு குறித்து விவாதிக்கக் கோரி விதி 267-இன் கீழ் 25 நோட்டீஸ்களை வழங்கினர். ஆனால் மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ், அனைத்து ஒத்திவைப்பு நோட்டீசுகளையும் நிராகரித்தார். இதனால், எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்ப்பு மற்றும் கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக அவை நடத்த முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது.
July 23, 2025 6:04 PM IST

