Last Updated:
ஆந்திர மாநிலத்தில், மனைவியின் குடும்பத்தினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, ரமணய்யாவை கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் மனைவியை பிரிந்து வாழ்ந்துவந்த கணவனை பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்று, மனைவியின் குடும்பத்தினர் கட்டையால் அடித்தே கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் நூனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 50 வயதான ரமணய்யா. ரமணையாவுக்கும் பிடுகுராலா கிராமத்தைச் சேர்ந்த ரமணம்மா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மகள் ஒருவர் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக ரமணம்மா கணவனை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அவர்களுடைய மகள் தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய சகோதரன் மூலம் கணவனுக்கு போன் செய்த ரமணம்மா சமாதானம் பேசி சுமுகமாக ஒரு முடிவுக்கு வரலாம், பேச்சுவார்த்தை வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும் சேர்ந்து வாழலாம் எனக் கூறியதால் மகளின் எதிர்கால வாழ்க்கையை கருதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டார் ரமணய்யா. அதன்படி மனைவியின் அழைப்பை ஏற்று தனது மாமனார் வீட்டுக்கு புறப்பட்டார் ரமணய்யா.
புறப்படும் முன், தன்னுடைய மகளிடம் நான் போய் சமாதானம் பேசி உன்னுடைய அம்மாவை அழைத்து வருகிறேன் என்று கூறிவிட்டு பிடுகுராலாவுக்கு புறப்பட்டு சென்றார். சமாதானம் பேச மாமனார் வீட்டுக்கு சென்ற ரமணையாவுக்கு அங்கு பெரிய பிரச்சனை காத்திருந்தது. அமைதியாக பேசுவார்கள் என நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அங்கு இருதரப்பிற்கு இடையே பெரும் வாக்குவாதம் எழுந்துள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, கைகலப்பு ஏற்பட, ரமணம்மாவின் குடும்பத்தினர் சுற்றி வளைத்து தாக்க ஆரம்பித்தனர். குறிப்பாக ரமணம்மாவின் சகோதரன் ஆவேசமாக கட்டையை எடுத்து வந்து தாக்கியதில் ரமணய்யா சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார். கணவனை பேச்சுவார்த்தைக்கு என அழைத்து தீர்த்துக் கட்டிய ரமணம்மா குடும்பத்தினர் அவரது சடலத்தை காரில் எடுத்துக் கொண்டு நூனபள்ளி கிராமத்திற்கு சென்றனர்.
அங்கு ரமணய்யா வீட்டு வாசலில் சடலத்தை போட்டு விட்டு சென்று விட்டனர். வீட்டின் முன் கார் நிற்கும் சத்தம் கேட்டு ஓடி வந்த அவருடைய மகள் என்ன நடந்தது என்று தாயிடம் கேட்டபோது, உன்னுடைய தந்தை எங்கள் வீட்டிற்கு வந்து தகராறு செய்தார். அப்போது ஏற்பட்ட சண்டையில் உன் தந்தை மரணம் அடைந்துவிட்டார் என்று கூறி விட்டு சென்று விட்டார் ரமணம்மா.
மேலும் இதுபற்றி ரமணய்யாவின் மகள் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பிரிந்து வாழ்ந்து வந்த கணவனை பேச்சுவார்த்தைக்கு அழைத்து தீர்த்துக் கட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
July 23, 2025 7:25 PM IST
பிரிந்து வாழ்ந்த மனைவி.. பேச்சுவார்த்தைக்கு சென்ற கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!


