Last Updated:
குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த நிலையில், அந்தப் பதவிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட நான்கு நபர்களின் பெயர்களை பாஜக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ள நிலையில், பாஜக சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரின் பெயரும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு நேற்று இரவு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். அந்தக் ராஜினாமா கடிதத்தில் உடல்நிலை காரணமாக ராஜினாமா செய்வதாகத் தெரிவித்திருக்கிறார்.
உடல் நலனுக்கு முக்கியத்துவம் தரவும், மருத்துவர்கள் அறிவுரை காரணமாகவும் ராஜினாமா செய்துள்ளதாகவும் ஜெகதீப் தன்கர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சரவைக் குழுவினருக்கும் ஜெகதீப் தன்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா முடிவு குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஜெகதீப் தன்கரின் உடல்நிலைக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம் என்றாலும், அவரது திடீர் முடிவுக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதாகச் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கிய நிலையில், முதல் நாளே ஜெகதீப் தன்கர் ராஜினாமா முடிவை அறிவித்ததும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஜெகதீப் தன்கர் ராஜினாமாவைத் தொடர்ந்து, யார் அடுத்த இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எனும் பேச்சுகள் பரவலாக எழுந்து வருகின்றன.
இந்நிலையில், பாஜக சார்பில் வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணி தொடங்கியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இரு அவைகளிலும் பெரும்பான்மை உள்ள நிலையில் வெற்றி பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே கருதப்படும் நிலையில், வேட்பாளர் பரிசீலனையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணனின் பெயர் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், மத்திய இணை அமைச்சரும் பிஹார் முன்னாள் முதலமைச்சரின் மகனுமான ராம்நாத் தாகூர், பிகார் ஆளுநர் முகமது ஆரிஃப் கான் மற்றும் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோரில் ஒருவர் களம் காண வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
July 22, 2025 7:47 PM IST


