Last Updated:
ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்திய விமானத்தில் பயணிகள் இறங்கும் போது விமானம் திடீரென தீப்பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் அமைப்புகளில் எந்தவொரு பிரச்சனைகளும் கண்டறியப்படவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் கூறிய நிலையில், டெல்லியில் ஏர் இந்தியா விமானம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கடந்த மாதம் 12 ஆம் தேதி லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி 260 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்த விசாரணையில், எரிபொருள் சுவிட்ச் கட்-ஆப் ஆனதே விபத்துக்கு காரணம் என விமான விபத்து புலனாய்வு அமைப்பு தெரிவித்திருந்தது.
இதையடுத்து, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட போயிங் 787, 737 ரக விமானங்களின் எஞ்சின் எரிபொருள் சுவிட்சுகளை கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது.
இந்த ஆய்வு பணிகளை முடித்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், தங்கள் போயிங் விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்புகளில் நடந்த சோதனையில் எந்த பிரச்சனையும் கண்டறியப்படவில்லை என்று ஏர் இந்தியா விளக்கம் தந்துள்ளது.
இந்த நிலையில், ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்திய விமானத்தில் பயணிகள் இறங்கும் போது விமானம் திடீரென தீப்பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமானத்தின் வால் பகுதியில் உள்ள ஆக்சலரி பவர் யூனிட்டில் தீப்பிடித்ததாக கூறப்படும் நிலையில், பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
July 22, 2025 5:00 PM IST


