இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு நேற்று இரவு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். அந்தக் ராஜினாமா கடிதத்தில் உடல்நிலை காரணமாக ராஜினாமா செய்வதாகத் தெரிவித்திருக்கிறார்.
உடல் நலனுக்கு முக்கியத்துவம் தரவும், மருத்துவர்கள் அறிவுரை காரணமாகவும் ராஜினாமா செய்துள்ளதாகவும் ஜெகதீப் தன்கர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சரவைக் குழுவினருக்கும் ஜெகதீப் தன்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா முடிவு குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஜெகதீப் தன்கரின் உடல்நிலைக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம் என்றாலும், அவரது திடீர் முடிவுக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதாகச் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கிய நிலையில், முதல் நாளே ஜெகதீப் தன்கர் ராஜினாமா முடிவை அறிவித்ததும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஜெகதீப் தன்கர் ராஜினாமாவைத் தொடர்ந்து, யார் அடுத்த இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எனும் பேச்சுகள் பரவலாக எழுந்து வருகின்றன. இந்தச் சூழலில், பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரைக் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம் எனும் குரல்கள் எழத் துவங்கியுள்ளன. அதுவும் பாஜக தரப்பில் இருந்து இந்தக் குரல்கள் எழத் துவங்கியிருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
பிகார் மாநிலத்தின் பாஜக தலைவர்களில் ஒருவரும், மாநில அமைச்சருமான பிரேம் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “இதை கட்சிதான் முடிவு செய்கிறது. யார் துணை ஜனாதிபதியானாலும் அவர்கள் பொறுப்பில் இருப்பார்கள். பீகாரைச் சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதியானால் நான் மகிழ்ச்சியடைவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், பிகார் மாநிலத்தின் மற்றொரு பாஜக தலைவரும், அமைச்சருமான நீரஜ் குமார் சிங், “இது நல்ல விஷயம். அவர் (நிதிஷ் குமார்), துணைக் குடியரசுத் தலைவராக வந்தால் என்ன பிரச்சனை? எல்லோரும் அவரவர் வேலையைச் செய்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
பிகார் பாஜக தலைவர்கள் அந்தப் பதவியை பிகாரின் தற்போதைய முதல்வர் நிதிஷ் குமாருக்குக் கிடைக்கலாம் எனப் பேசி வருவது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் பிகார் மாநிலத்திற்குச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பிகார் மாநிலத்தில், ஆளும் ஜனதா தள் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது. இதில் மீண்டும் ஜனதா தள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், நிதிஷ் குமாரைத் துணைக் குடியரசுத் தலைவராக்கிவிட்டு, மாநிலத்தின் முதல்வராக பாஜகவைச் சேர்ந்தவரை நியமித்து, மாநிலத்தைத் தனது நேரடி ஆளுமைக்குக் கீழ் கொண்டுவர பாஜக காய் நகர்த்துகிறது எனவும் பேச்சுகள் எழுந்துள்ளன.
பல்வேறு கோணங்கள், பல்வேறு அபிப்பிராயங்கள் இருந்தாலும், எவை எதற்காக நடந்தன. இனி என்ன நடக்கப்போகிறது என்பது உள்ளிட்ட அனைத்தும் இனி நிகழும் காலங்களில் நமக்குத் தெரியவரும்.
July 22, 2025 3:54 PM IST
துணை குடியரசுத் தலைவராகும் நிதிஷ் குமார்? பாஜக தலைவர்கள் எழுப்பும் குரலும்.. அரசியல் யூகங்களும்!

