Last Updated:
முழங்காலில் காயம் காரணமாக நிதிஷ் குமார் ரெட்டி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். அர்ஷ்தீப் சிங்கும் காயம் அடைந்ததால், அன்ஷுல் கம்போஜ் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் சேர்க்கப்பட்டனர்.
முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி விலகியுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி ஜிம் பயிற்சியில் ஈடுபட்டபோது முழங்காலில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது.. இதனால் எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் நிதிஷ் குமார் ரெட்டி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில் பயிற்சியின்போது காயமடைந்த அர்ஷ்தீப் சிங்கும் 4வது போட்டியில் விளையாட மாட்டார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதால், இருவருக்கும் மாற்றாக சிஎஸ்கே அணி வீரர் அன்ஷுல் கம்போஜ் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் ஜூலை 23 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் தொடரை வெல்லும். இதனால் இந்திய அணி மான்செஸ்டர் டெஸ்டில் வெற்றி பெற தீவிர முனைப்பு காட்டி வருகிறது. 2 பந்துவீச்சாளர்கள் தற்போது விலகி உள்ளதால் நட்சத்திர வீரர் பும்ரா மான்செஸ்டர் டெஸ்டில் விளையாட வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. ஆனால் போட்டி ஆரம்பிக்கும் இறுதி நாளில் தான் ஆடும் லெவனில் உள்ள மாற்றங்கள் தெரிய வரும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்பு பஞ்சம் இருக்காது.
July 21, 2025 1:43 PM IST


