ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்திரம் சிறப்புமிக்கது என்றாலும் ஆடி, கார்த்திகை உள்ளிட்ட சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரம் அதீத சிறப்பு பெற்றதாக கருதப்படுகிறது.
ஆடி என்பது, ஆண்டின் இரண்டாவது பாதி துவங்கும் மாதமாகும். அதனால் இந்த மாதத்தில் வரும் அனைத்து நாட்களுமே விசேஷமானதாக சொல்லப்படுகிறது. இது தெய்வ அருளை பெறுவதற்குரிய காலமாக கருதப்படுகிறது. மற்ற மாதங்களில் விரதம் இருந்து வேண்டிக் கொள்வதை விட ஆடி மாதத்தில் விரதம் இருந்து வேண்டிக் கொண்டால் உடனடியாக அந்த வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து வழிபட்டால் முருகன் அருளால் கர்ம வினைகளில் இருந்து விடுபட்டு, உலகியல் துன்பங்களில் இருந்து மட்டுமின்றி பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியில் இருந்தும் விடுபட்டு மோட்சத்தை அடைய முடியும்.
ஆடி கிருத்திகை நாளில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் மட்டுமின்றி அனைத்து முருகன் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடத்தப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, காவடி, பால்குடம், அலகு குத்தியும் முருகப் பெருமானுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றுவார்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து வழிபட்டால் ஞானம், ஆரோக்கியம், வெற்றி, செல்வ வளம் கிடைக்கும். உறவுகள் பலப்படும். கிரக தோஷங்கள், ஜாதகத்தில் இருக்கும் கிரக கோளாறுகள் ஆகியவை நீங்கும். வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள், தீமைகள், தடைகள், நோய்கள், கடன்கள் அழியும் என்பது நம்பிக்கை.
வழக்கமாக மாதத்திற்கு ஒரு முறை தான் கார்த்திகை நட்சத்திரம் வரும். ஆனால் இந்த ஆண்டு மிகவும் விசேஷமாக ஆடி மாதத்தில் 2 கார்த்திகை நட்சத்திரங்கள் வருகின்றன. அதாவது, ஆடி 4ம் தேதியான ஜூலை 20 மற்றும் ஆடி 31ம் தேதியான ஆகஸ்ட் 16 ஆகிய இரண்டு நாட்களும் கார்த்திகை நட்சத்திரம் வருகிறது. இதனால் இரண்டில் எதை ஆடிக் கிருத்திகையாக எடுத்துக் கொண்டு விரதம் இருக்க வேண்டும் குழப்பம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டு நாட்களுமே மிகவும் தவற விடக் கூடாத மிகவும் சிறப்புமிக்க நாட்களாகும். திருத்தணி, திருச்செந்தூர், பழனி ஆகிய தலங்களில் உள்ள முருகன் கோவிலில் ஆகஸ்ட் 16ல் தான் ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி 04ம் தேதியான ஜூலை 20ம் தேதி வரும் கிருத்திகை நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமையும் ஏகாதசி திருநாளும் இணைந்த நாளில் வருகிறது. அதாவது, பிரம்மா,விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தேவர்களும் இணைந்த நாளாக இது வருகிறது. இந்த நாளில் எந்த வேண்டுதல் வைத்தாலும் அது உடனடியாக நிறைவேறும். அதே போல் ஆகஸ்ட் 16ம் தேதி, ஆடி மாதத்தின் நிறைவு நாளில் வரும் கிருத்திகை சனிக்கிழமையும் தேய்பிறை அஷ்டமியும் இணைந்த நாளில் வருகிறது.
அது மட்டுமல்ல, அன்று கிருஷ்ண பகவான் அவதரித்த கோகுலாஷ்டமியும் சேர்ந்த ஒரு நாளாகும். இது முருகன், பெருமாள், பைரவர், சனி பகவான் ஆகிய தெய்வங்களின் அருளை பெறுவதற்கு மிகவும் ஏற்ற நாளாக உள்ளது. இதனால் பக்தர்கள் இரண்டு நாட்களில் தங்களுக்கு வசதியான நாளை தேர்வு செய்து விரதம் இருக்கலாம். முடிந்தவர்களும், முருகப் பெருமானின் தீவிர பக்தர்களும் இரண்டு நாட்களிலும் விரதம் இருப்பது இரு மடங்கு பலனை தரும்.