Last Updated:
பீகார் காவல்துறையின் கூடுதல் அதிகாரி குந்தன் கிருஷ்ணன், விவசாயிகளுக்கு வேலை இல்லாததால் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் கொலைகள் அதிகரிக்கின்றன என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் “விவசாயிகளுக்கு வேலை இல்லாததால்” குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதாக பீகார் காவல்துறையின் கூடுதல் தலைமையக அதிகாரி குந்தன் கிருஷ்ணன் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தின் காவல்துறையின் கூடுதல் தலைமையக அதிகாரி குந்தன் கிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சமீபத்தில், பீகார் முழுவதும் ஏராளமான கொலைகள் நடந்துள்ளன. பெரும்பாலான கொலைகள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நடக்கின்றன.
பெரும்பான்மையான விவசாயிகளுக்கு வேலை இல்லாததால், மழை வரும் வரை இது தொடர்கிறது. மழைக்குப் பிறகு, விவசாய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பரபரப்பாகி, சம்பவங்கள் குறைகின்றன.
பீகார் முழுவதும் கொலைகள் நடக்கின்றன. குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால், ஊடகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கொலைகளில் கவனம் செலுத்துகின்றன. தேர்தல்கள் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகளும் இதற்கு அதிக கவனம் செலுத்துகின்றன.
இளைஞர்கள் பணத்திற்காக இதுபோன்ற செயல்களை அதிகளவில் செய்கிறார்கள். எனவே இந்த மாதம் நாங்கள் ஒரு புதிய பிரிவை உருவாக்கியுள்ளோம். அந்த பிரிவின் பணி, இதுவரை துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், ஒப்பந்தக் கொலையாளிகள் அனைவரின் தரவுத்தளத்தையும் உருவாக்கி, அவர்களை கண்காணிக்க இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. முதலமைச்சர் நிதிஷ் குமார், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவோம் உள்ளிட்ட வாக்குகளை கவரும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார். இந்நிலையில், அம்மாநிலத்தின் காவல் அதிகாரி குற்றச்சம்பவங்களுக்கு விவசாயிகளை காரணமாக சொல்லியிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
July 17, 2025 6:19 PM IST


