Last Updated:
காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளதால், ஏர் கண்டிஷனர்கள், கூலர்கள் மற்றும் மின்விசிறிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது நாடு முழுவதும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
குளுகுளு காலநிலைக்கு புகழ்பெற்ற காஷ்மீர் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்பத்தை எதிர்கொண்டு வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடும் வெப்பம் நிலவியது.
இங்கு சராசரி வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது. இது இயல்பைவிட மூன்று டிகிரி அதிகம். இது மட்டுமல்லாமல், ஜூலை மாதத்திலும் வெப்பம் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை 5ஆம் தேதி, ஸ்ரீநகரில் வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸாக பதிவானது. கடந்த 70 ஆண்டுகளில் இதுவே அதிகபட்சமாகும்.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளதால், ஏர் கண்டிஷனர்கள், கூலர்கள் மற்றும் மின்விசிறிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது நாடு முழுவதும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், நாடு முழுவதும் கோடை சீசன் தீவிரமாக இருந்தாலும்கூட, வரலாற்று ரீதியாக மிதமான கோடைகாலத்திற்கு பெயர்பெற்றது காஷ்மீர்.
ஸ்ரீநகர், அனந்த்நாக், பாரமுல்லா மற்றும் குல்காமில் வசிப்பவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏசி மற்றும் ஏர் கூலர்கள் வாங்க அதிக எண்ணிக்கையில் உபகரண கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். “ஜூலை மாதத்தில் இந்த மாதிரியான மக்கள் கூட்டம் இதுவரை பார்த்ததே இல்லை” என்று அனந்த்நாக்கில் உள்ள ஒரு கடைக்காரர் கூறினார். அதே நேரம் உள்ளூர் மின்னணு விற்பனையாளர் ஒருவர் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது, ஏசி விற்பனை 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வெயில் காஷ்மீரின் பல குடும்பங்களை குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களை குளிரூட்டும் சாதனங்களில் முதலீடு செய்ய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது. உள்ளூர் மெக்கானிக்கான உமர் என்பவர் பேசுகையில், ஏசி மற்றும் ஏர் கூலர்கள் பழுதுபார்க்கும் பணிகளில் சுமார் 80 சதவீதம் அதிகரிப்பு காணப்படுவதாக குறிப்பிட்டார். மேலும், மக்கள் பாரம்பரிய மின்விசிறிகளைவிட, AC வாங்க அதிக முக்கியத்துவம் கொடுக்கும்போக்கு அதிகரித்து வருவதாகவும் கூறினார்.
இருப்பினும் AC பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து காலநிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கிலாம் அரசு பட்டப்படிப்பு கல்லூரியின் சுற்றுச்சூழல் புவியியலாளர் டாக்டர் மசூன் ஏ.பெய்க் பேசுகையில், நீண்டகால சுற்றுச்சூழல் விளைவுகளை பற்றி குறிப்பிட்டார். குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்து வருவது, வளிமண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும் குளோரோஃப்ளூரோகார்பன்கள் (CFCs) வெளியேற்றம் அதிகரிக்கிறது என்று கூறினார். அதேபோல “ஏசி வாங்குவது ஆடம்பரமாக இல்லாமல் விரைவில் அவசியமாக மாறும் நிலையை நாம் அடையக்கூடும்” என்றும் எச்சரித்தார்.
July 14, 2025 9:02 PM IST


