ஜோகூர்:
குடிநுழைவை எளிதாக்கும் முயற்சியில் ஒன்றாக அண்மையில் சிங்கப்பூர் நடைமுறைப்படுத்தி, மிகவும் சிறப்பாகவும் இலவுவாகவும் செயற்படும் QR குறியீட்டு குடிநுழைவு முறையினை, மலேசியா – சிங்கப்பூர் குடிநுழைவு முகப்பிடங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்று, குறித்த இரண்டு நிலவழிச் சோதனைச்சாவடிகளினூடாக அன்றாடம் பயணிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக சோதனை சாவடிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கியூஆர் குறியீட்டு முறையை சிங்கப்பூர் கடந்த மார்ச் மாதம் நடைமுறைப்படுத்தியது.
இது நேரத்தை மிச்சப்படுத்துவதாகப் பயணிகள் பலர் கூறுகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி ஜோகூரில் உள்ள சோதனைச்சாவடிகளில் இருக்கும் குடிநுழைவு அதிகாரிகளிடம் கடப்பிதழைத் தந்து அவர்கள் அதைச் சரிபார்த்து முத்திரையிட்ட பிறகே மலேசியாவுக்குள் நுழைய முடியும்.
எனவே, ஜோகூரிலும் இந்த QR குறியீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் பயணம் சுமுகமாகவும் இருப்பதுடன் நேரம் மிச்சமாகும் என்று வாரத்துக்குப் பலமுறை ஜோகூர் பாலத்தைக் கடக்கும் 38 வயது ஸுல்ஹாய்ரி ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.
“QR குறியீட்டுக் குடிநுழைவு முறையை சிங்கப்பூர் மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்தியது. அதை பயன்படுத்தியிருக்கிறேன். அதைப் பயன்படுத்தியபோது சோதனைச்சாவடிகளைக் கடப்பது சுமுகமாக இருந்தது. எனது கைப்பேசியைப் பயன்படுத்தி அந்தக் QR குறியீட்டை வருடினால் போதும். குடும்பம், நண்பர்கள் எனக் கும்பலாகப் பயணம் செய்யும்போது நேரத்தை மிச்சப்படுத்த இது உதவும். வாகனத்தில் உள்ள அனைவரையும் ஒரே குறியீட்டுக் குறியின்கீழ் பதிவு செய்துகொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜோகூர் பொதுப்பணி, போக்குதரத்து, உள்கட்டமைப்பு, தொடர்புக் குழுவின் தலைவர் முகமட் ஃபாஸ்லி முகமட் சாலே, QR குறியீட்டுத் திட்டத்தைப் பற்றி பரிசீலனை செய்ய நோன்புப் பெருநாளுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் அமைப்புகளுடன் கலந்துரையாட இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த QR குறியீட்டுக் குடிநுழைவு முறையை சிங்கப்பூர் மார்ச் மாதம் 19ஆம் தேதியன்று உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச்சாவடிகளில் நடைமுறைப்படுத்தியது.
இந்நிலையில், QR குறியீட்டுக் குடிநுழைவு முறையை ஜோகூரில் உள்ள குடிநுழைவுச் சோதனைச்சாவடிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என சிங்கப்பூர் மற்றும் மலேசிய அரசாங்கங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.