தில்லியில் வியாழக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹரியாணா மாநிலம், ஜஜ்ஜர் பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி தில்லியில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது.
காலை 9.04 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆகவும் 10 கி.மீ. ஆழத்திலும் பதிவாகியுள்ளது.
தில்லி, காசியாபாத், குருகிராம், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதுவரை சேதங்கள் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
தில்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டு வருகின்றது. கடந்த 5 மாதங்களில் பதிவான இரண்டாவது பெரிய நிலநடுக்கம் இது.
கடந்த பிப்ரவரி தில்லி மற்றும் சுற்றுப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவாகியிருந்தது.