Last Updated:
நிலச்சரிவு ஏற்பட்ட அன்று நள்ளிரவில் அந்த பகுதியில் இருந்த வளர்ப்பு நாய் ஒன்று தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்தது.
இமாசல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது உரிமையாளர்களை எச்சரிக்கை செய்த வளர்ப்பு நாய், சுமார் 67 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மலைகள் சூழ்ந்த இமாசல பிரதேச பகுதிகளில் தற்போது பருவமழை அதிகம் பெய்து வருகிறது. மேலும் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக குறைந்த பகுதியில் மிக அதிகமான கனமழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்படத் தொடங்கியது.
குறிப்பாக மண்டி மாவட்டத்தில் நிலச்சரிவு அதிகம் காணப்பட்டது. கடந்த 30 ஆம் தேதி நள்ளிரவில் மண்டி மாவட்டத்தின் சியாதி என்ற கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த பகுதியில் 20 குடும்பங்களை சேர்ந்த சுமார் 67 பேர் வசித்து வருகிறார்கள். நிலச்சரிவு ஏற்பட்ட அன்று நள்ளிரவில் அந்த பகுதியில் இருந்த வளர்ப்பு நாய் ஒன்று தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்தது.
இதையடுத்து அங்கிருந்த நரேந்திரன் என்பவர் தூக்கத்திலிருந்து விழித்து அக்கம் பக்கம் பார்த்துள்ளார். அப்போது நிலச்சரிவு ஏற்படுவதை பார்த்த அவர் அங்கிருந்தவர்களை எச்சரிக்கை செய்து அனைவரையும் எழுப்பி பாதுகாப்பான இடத்திற்கு செல்ல உதவினார்.
அடுத்த சில நிமிடங்களில் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு அனைத்து வீடுகளும் தரைமட்டமானது. இதன் மூலம் சுமார் 67 உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
உயிர் பிழைத்தவர்கள் கடந்த ஏழு நாட்களாக திரியம்பலா கிராமத்தில் கட்டப்பட்ட நைனா தேவி கோவிலில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதற்கிடையில், வீடுகளை இழந்த சோகம் காரணமாக பல கிராம மக்கள் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
July 09, 2025 3:34 PM IST


