கேரளா மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், நர்சிங் படித்து முடித்துவிட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு ஏமனுக்கு வேலைக்கு சென்றார். 2011-ம் ஆண்டு டோமி தாமஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்று, ஒரு குழந்தை பிறந்ததும் குடும்பத்துடன் ஏமனில் செட்டில் ஆகியுள்ளார்.
நாளடைவில் போதிய வருவாய் இல்லாததால், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து சொந்தமாக கிளினிக் ஆரம்பித்தார். 2015 ஆம் ஆண்டு கிளினிக் தொடங்கிய பின், கேரளா வந்த நிமிஷா பிரியாவுடன் மஹ்தியும் உடன் வந்துள்ளார்.
இதையடுத்து தனியாக ஏமன் சென்ற செவிலி நிமிஷா பிரியாவிடம் இருந்து, முழுமையாக கிளினிக்கை அபகரிக்க மஹ்தி முற்பட்டுள்ளார். அதற்கு நிமிஷா பிரியா மறுப்பு தெரிவித்ததும், அவரை துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.
கேரளா வந்த போது நிமிஷா பிரியாவுடன் எடுத்த போட்டோவை காட்டி, அவர் தனது மனைவி என்று கூறி ஏமன் அதிகாரிகளை மஹ்தி நம்ப வைத்துள்ளார். தொடர்ந்து பாஸ்போர்ட்டை தராமல் மிரட்டிய மஹ்திக்கு, மயக்க ஊசி செலுத்தி அதை மீட்க கேரள செவிலி திட்டமிட்டுள்ளார். மயக்க மருந்து அதிக அளவில் உடலில் செலுத்தப்பட்டதால் மஹ்தி உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏமனில் உள்ள கீழமை நீதிமன்றம் கேரள செவிலிக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, கடந்த 2023ம் ஆண்டு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக கேரள செவிலியை, மரண தண்டனையில் இருந்து விடுவிக்க அவரின் தாயார் பிரேமா குமாரி ஏமனில் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். இதனிடையே, உயிரிழந்த மஹ்தி குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கி, தனது மகளை வழக்கில் இருந்து விடுவிக்கவும் முயற்சி மேற்கொண்டார்.
இதற்காக, ஏமனில் உள்ள இந்தியர்கள் மூலம் 34 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி திரட்டினார். அனைத்து முயற்சிகளும் பலனளிக்காமல் போனதால் பிரேமா குமாரி உட்பட அவரின் குடும்பத்தினர் செய்வது அறியாமல் திகைத்துப் போயுள்ளனர்.
இந்த நிலையில் சிறையில் உள்ள நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற, ஏமன் அதிபர் ரஷாத் அல் அலிமி கடந்த 2024ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தார். ஒரு மாதத்திற்குள் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என அப்போது பேச்சுகள் எழுந்தன.
அதேபோல், இந்தச் செய்தி வந்ததும், அதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், நிமிஷா பிரியாவை மீட்க, அவரது குடும்பத்தினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளதை அறிவோம் என குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு உறுதுணையாக, அனைத்து உதவிகளையும் இந்திய அரசு செய்து வருவதாக தெரிவித்தார்.
இதனால், கொலை வழக்கில் தண்டனை பெற்ற கேரள செவிலி நிமிஷா பிரியா, மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்படுவார் என அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், அவருக்கு வரும் 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாக பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவலை உறுதி செய்யும் விதமாக, நிமிஷா பிரியாவின் தாயார் பிரேமா குமாரியின் பவர் ஆஃப் அட்டர்னி உரிமையை வைத்திருக்கும் மனித உரிமை ஆர்வலர் சாமுவேல் ஜெரோம், ஏமன் சிறை அதிகாரிகள் அவரது மரண தண்டனை நிறைவேற்றப்படும் தேதி குறித்து தனக்குத் தெரிவித்ததாக ஒன்மனோரமாவிடம் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் அறிந்ததில் இருந்து நிமிஷாவின் குடும்பத்தினர் பெரும் பதட்டத்திலும், மீளமுடியாத சோகத்திலும் ஆழ்ந்திருக்கின்றனர்.
July 08, 2025 9:16 PM IST
கேரளா செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை தேதி அறிவிப்பு… மீளா சோகத்தில் குடும்பத்தினர்

