புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 626 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் வியான் முல்டர் முச்சதம் அடித்து சாதனை படைத்தார்.
ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 88 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 466 ரன்கள் குவித்தது. டோனி டி ஸோர்ஸி 10,லெசெகோ செனோக்வானே 3 ரன்களில் நடையை கட்டினர். டேவிட் பெடிங்காம் 82, லுவான் -ட்ரே பிரிட்டோரியஸ் 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
வியான் முல்டர் 259 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 34 பவுண்டரிகளுடன் 264 ரன்களும், டெவால்ட் பிரேவிஸ் 15 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தென் ஆப்பிரிக்க அணி தொடர்ந்து விளையாடியது. வியான் முல்டர் 297 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 38 பவுண்டரிகளுடன் முச்சதம் அடித்தார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக முச்சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை அவர், படைத்தார். இந்த வகை சாதனையில் இந்தியாவின் வீரேந்திர சேவக் 2008-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் 278 பந்துகளில் முச்சதம் அடித்து சாதனை படைத்து முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த 2-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையையும் பெற்றார் வியான் முல்டர். இதற்கு முன்னர் ஹசிம் ஆம்லா (311) முச்சதம் அடித்திருந்தார்.
வியான் முல்டருக்கு உறுதுணையாக விளையாடிய டெவால்ட் பிரேவிஸ் 30 ரன்களில் மட்டிமிகு பந்தில் ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்க அணி 114 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்க 626 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
அப்போது வியான் முல்டர் 334 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 49 பவுண்டரிகளுடன் 367 ரன்களும் கைல் வெர்ரெய்ன் 42 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த போட்டியில் 367 ரன்கள் விளாசியதன் மூலம் டெஸ்ட் அரங்கில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் வியான் முல்டர் நிகழ்த்தினார். இதற்கு முன்னர் ஹசிம் ஆம்லா 311 ரன்கள் குவித்திருந்தார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பிரையன் லாரா விளாசிய 400 ரன்களே இதுவரை ஓர் இன்னிங்ஸில் விளாசப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்து வருகிறது. இந்த சாதனையை முறியடிக்க வியான் முல்டருக்கு 34 ரன்களே தேவையாக இருந்தன. ஆனால் அவர், சாதனையை கருத்தில் கொள்ளாமல் டிக்ளேர் முடிவை அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் வியான் முல்டர் (367) 5-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த வகையில் பிரையன் லாரா (400), மேத்யூ ஹைடன் (380), பிரையன் லாரா (375), ஜெயவர்த்தனே (374) முதல் 4 இடங்களில் உள்ளனர்.
டிக்ளேர் செய்தது ஏன்? – முல்டர் விளக்கம்: “ஆட்டத்தில் நாங்கள் போதுமான ரன்கள் எடுத்திருந்தோம். அதோடு நாங்கள் பந்து வீச வேண்டும் என நினைத்தேன். பிரையன் லாரா ஜாம்பவான். அந்த சாதனையை தன்வசம் வைத்துக்கொள்ள அவர் தகுதியானவர். மற்றொரு முறை எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தாலும் இதையேதான் செய்வேன். லாரா ஜாம்பவான்” என வியான் முல்டர் தெரிவித்துள்ளார்.