வாஷிங்டன்: ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு 25 சதவீத விதிக்கப்படுவதாக அறிவித்த சில மணி நேரங்களில், மேலும் 12 நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பட்டியலிட்டுள்ளார். மியான்மர், தென்னாப்பிரிக்கா, மலேசியா, வங்கதேசம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு வரிகளை அவர் உயர்த்தியுள்ளார். அந்த நாடுகளுக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பட்டியல்:
தென் கொரியா – 25% வரி
ஜப்பான் – 25% வரி
மியான்மர் – 40% வரி
லாவோஸ் – 40% வரி
தென்னாப்பிரிக்கா – 30% வரி
கஜகஸ்தான் – 25% வரி
மலேசியா – 25% வரி
துனீசியா – 25% வரி
இந்தோனேசியா – 32% வரி
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா – 30% வரி
வங்கதேசம் – 35% வரி
செர்பியா – 35% வரி
கம்போடியா – 36% வரி
தாய்லாந்து – 36% வரி
மேலும் “அமெரிக்காவுக்கு எதிரான இந்த நீடித்த வர்த்தக பற்றாக்குறைக்கு காரணமான பல ஆண்டுகால வரி மற்றும் வரி அல்லாத கொள்கைகள் மற்றும் வர்த்தக தடைகளை சரிசெய்ய இந்த வரிவிதிப்பு அவசியம் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். இந்த பற்றாக்குறை எங்கள் பொருளாதாரத்துக்கும், எங்கள் தேசிய பாதுகாப்புக்கும் ஒரு பெரிய அச்சுறுத்தலாகும்” என்று இந்த நாடுகளுக்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் கூட அமெரிக்க அதிபரிடமிருந்து வரி தொடர்பான கடிதம் கிடைக்கப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது . மத்திய அரசு மற்றும் வாஷிங்டன் இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான விரிவான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அமெரிக்க நிர்வாகம் புதிய வரி விதிப்பு மற்றும் திருத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அதிகாரபூர்வமாக கடிதம் அனுப்பும் என்று கூறியிருந்தார். அதன் முதல்கட்டமாக தற்போது ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு ட்ரம்ப் கடிதம் அனுப்பியுள்ளார்.
முன்னதாக, அமெரிக்க அதிபராக 2-வது முறையாக கடந்த ஜனவரி 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்றார். அமெரிக்காவுக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் தங்கள் நாட்டு பொருட்களுக்கு அதிக வர்த்தக வரி விதிப்பதாக தெரிவித்தார். இதற்கு பதிலடியாக பரஸ்பர வரி விதிக்கப்படும் என அறிவித்த அவர், கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அதற்கான பட்டியலையும் வெளியிட்டார். இதில் இந்திய பொருட்களுக்கு 26% வரி விதிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
எனினும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தன. இதையடுத்து, இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள ஏதுவாக பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் ட்ரம்ப். இதையடுத்து, அமெரிக்காவுடன் பல நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. 90 நாள் காலக்கெடு வரும் நாளை (ஜூலை 9) நிறையவடைய உள்ள நிலையில், தற்போது 14 நாடுகளுக்கான வரிகள் குறித்த விவரத்தை ட்ரம்ப் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.