Last Updated:
கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதால் மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் வடக்கு மாவட்டங்களான மலப்புரம், கோழிக்கோடு மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவல் எச்சரிக்கையை அம்மாநில சுகாதாரத்துறை விடுத்துள்ளது.
மலப்புரம் மாவட்டத்தில் 18 வயது இளம் பெண் ஒருவருக்கும், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவருக்கும் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவ்விரு மாவட்டங்கள் மற்றும் கோழிக்கோடு மாவட்டத்திற்கும் கேரள சுகாதாரத்துறை நிபா வைரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநிலத்தில் இருவருக்கு நிபா வைரஸ் கண்டறியப்பட்டதும், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையை மேற்கொண்டார். மேலும், தொற்று உறுதியான இருவருடனும் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறியும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அதேபோல், கோழிக்கோடு, பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்காணிக்கவும், தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும் ஒவ்வொரு பிராந்தியத்திலும் 26 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் செய்தியாளர்கள் சந்திப்பில், “நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய காவல்துறையின் உதவி கோரப்பட்டுள்ளது. மாநில மற்றும் மாவட்ட அளவில் உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை கோழிக்கோடு, பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்வார்கள். கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட இயற்கைக்கு மாறான அனைத்து மரணங்களும் கண்காணிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
July 04, 2025 9:30 PM IST