இந்தக் கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் (DGFT) அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வங்கதேசத்திலிருந்து தரைவழி மார்க்கமாக சணல் மற்றும் சணல் பொருட்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
சணல், சணல் பொருட்கள், சணல் கழிவு, ஒற்றை சணல் இழை, நெய்யப்பட்ட சணல் இழை, ப்ளீச் செய்யப்படாத நெய்யப்பட்ட சணல் இழை உள்ளிட்ட பல பொருட்களுக்கு வந்த தடை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – வங்கதேச எல்லையில் உள்ள எந்தவொரு தரைவழித் துறைமுகத்திலிருந்தும் வங்கதேசத்திலிருந்து இது போன்ற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாது என்று DGFT தெரிவித்துள்ளது. எனினும், சணல் மற்றும் சணல் பொருட்களுக்கான இறக்குமதி மும்பையில் உள்ள நவா ஷேவா துறைமுகம் வழியே மட்டுமே அனுமதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஜூன் 27 தேதியிட்ட DGFT அறிவிப்பின்படி, இந்தக் கட்டுப்பாடுகள் இந்தியா வழியாக நேபாளம் மற்றும் பூட்டானுக்குச் செல்லும் வங்கதேச ஏற்றுமதிகளுக்குப் பொருந்தாது. ஆனால், அதேநேரம் நேபாளம் அல்லது பூட்டானிலிருந்து மேற்கண்டது போன்ற வங்கதேச சணல் பொருட்களை இந்தியாவிற்கு மறு ஏற்றுமதி செய்ய அனுமதி கிடையாது என்று DGFT தெளிவாகக் கூறியுள்ளது.
முன்னதாக வங்கதேசத்தின் இடைக்கால தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சீனாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியம் குறித்துத் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்குப் பிறகு, நம் மத்திய அரசு இந்தியாவின் வடகிழக்கு நிலத் துறைமுகங்களான அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் – மற்றும் மேற்கு வங்கத்தின் ஃபுல்பாரி மற்றும் சங்கரபந்தா வழியாக வங்கதேச ஆயத்த ஆடைகள் (RMG -ரெடிமேட் கார்மென்ட்ஸ்) மற்றும் பிற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்தது.
சீன சுற்றுப்பயணத்தின்போது அங்கு பேசிய வங்கதேச தலைமை ஆலோசகர் யூனுஸ், இந்தியாவின் வடகிழக்கில் உள்ள 7 மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டுள்ளதாகவும், அந்த மாநிலங்களுக்குக் கடல் மார்க்கப் பாதுகாப்புக்கு ஆதாரம் வங்கதேசம்தான் என்கிற ரீதியில் கருத்துத் தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்து 2 நாடுகள் இடையேயான ராஜதந்திர மோதலைத் தூண்டியுள்ளது. மேலும், இந்திய அதிகாரிகள் யூனுஸின் பேச்சு பிராந்தியத்தின் இணைப்பைக் குறைத்து மதிப்பிட்டுள்ளதாகக் கருதுகின்றனர்.
இந்தியாவின் மே 17 கட்டுப்பாடுகள் மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா துறைமுகம் அல்லது மகாராஷ்டிராவில் உள்ள நவா ஷேவா துறைமுகம் வழியாக ஆயத்த ஆடைகள் (RMG), பிளாஸ்டிக், மெலமைன், ஃபர்னிச்சர், பழச்சாறுகள், கார்பனேட்டட் பானங்கள், பேக்கரி பொருட்கள், மிட்டாய் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்பட தனது ஏற்றுமதி முறையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தை வங்கதேசத்திற்கு ஏற்படுத்தியது. இது அந்நாட்டின் லாஜிஸ்டிக் செலவுகளைக் கடுமையாக அதிகரிக்கச் செய்துள்ளது.
அதேநேரம் மீன், எல்பிஜி, சமையல் எண்ணெய் மற்றும் நொறுக்கப்பட்ட கல் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்படாமல் இருக்கும் என்று இந்தியாவின் உத்தரவு தெளிவுபடுத்தியது. வங்கதேசத்திலிருந்து நேபாளம் மற்றும் பூட்டானுக்கு இந்தியா வழியாகச் செல்லும் பொருட்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களுக்கான சில வங்கதேச ஏற்றுமதிகளுக்கு அரசு நிலத் துறைமுகக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த நடவடிக்கை “உறவில் சமத்துவத்தை” மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டதாக அப்போது கூறப்பட்டது.
இதனிடையே வங்கதேசத்திலிருந்து அனைத்து ஏற்றுமதிகளையும் தடையின்றி இந்தியா இதுவரை அனுமதித்திருந்தாலும், இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்கான போக்குவரத்து மற்றும் சந்தை அணுகல் வங்கதேசத்தால் தடை செய்யப்பட்டதாக ஆதாரங்கள் மேலும் தெரிவித்தன. எனவே, வங்கதேசத்துடனான உறவு இப்போது “பரஸ்பர அடிப்படையில்” இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆதாரங்களின்படி, வங்கதேசத்திலிருந்து இறக்குமதியை இரண்டு துறைமுகங்களுக்கு மட்டுமே இந்தியா கட்டுப்படுத்தியது வங்கதேசத்துக்கு எதிரான ஒரு பரஸ்பர நடவடிக்கையாகும். முன்னதாக வங்கதேசம் இந்திய நூல் மற்றும் அரிசி மீது இதேபோன்ற வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்தது, மேலும் அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து இந்தியப் பொருட்களின் மீதும் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் ஆய்வை அதிகரித்தது.
வங்கதேசம் “அதன் நன்மைக்காக மட்டுமே இருதரப்பு வர்த்தகத்தில் தனித்துச் செயல்பட்டு விதிமுறைகளைத் தேர்ந்தெடுக்க முடியாது அல்லது வடகிழக்கு அதன் ஏற்றுமதிக்கான ஒரு கேப்டிவ் மார்க்கெட் என்று கருத முடியாது, அதே நேரத்தில் சந்தை அணுகல் மற்றும் போக்குவரத்தை மறுத்துவிட முடியாது” இதனை அந்நாடு உணர வேண்டும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
July 01, 2025 3:01 PM IST
வங்கதேசத்திலிருந்து சணல் இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள இந்தியா…! ஏன் தெரியுமா…?

