அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி விலகக் கோரி பாஜகவினர் மத்திய தில்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. கேஜரிவாலை ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி விலகக் கோரி மத்திய தில்லியில் பாஜகவினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கலால் கொள்கை முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களின் மதுபான பாட்டில் வடிவ கட்அவுட்களுடன் செல்ஃபி பாயிண்ட் ஒன்றும் ஆர்ப்பாட்ட இடத்தில் அமைக்கப்பட்டது. இதில் தில்லி மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, மூத்த தலைவர்கள், கட்சியின் மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம் ஆத்மி தலைமையிலான தில்லி அரசில் ஊழல் மற்றும் ஊழல்கள் காரணமாக கைது செய்யப்பட்டதற்காக கேஜரிவால் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
கேஜரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் கூட்டு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி அழைப்புவிடுத்திருந்த நிலையில் பாஜவினரால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தகக்து.

