Last Updated:
பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் நியமன எம்எல்ஏக்களின் மாற்றத்தால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
பாஜக தேசியத் தலைவர் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கட்சியை பலப்படுத்த தலைமை திட்டமிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் புதிய தலைவரை தேர்வு செய்ய பாஜக தலைமை மும்முரம் காட்டி வருகிறது. அதேநேரம் தலைவர் ரேஸில் பலரும் இறங்கியதால் புதிய தலைவரை தேர்வு செய்வதில் சுணக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் நாளை (ஞாயிறு, ஜூலை 29) புதுச்சேரி மாநில பாஜக தலைவருக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. தொடர்ந்து 30ஆம் தேதி தேர்தலை நடத்தி அன்று மாலையே புதிய தலைவரை அறிவிக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் பாஜக தோல்வி கண்டது. இந்நிலையில், பல அணிகளாக கிடக்கும் கட்சியை ஒருங்கிணைக்க புதியவர்களுக்கு கட்சியிலோ அல்லது ஆட்சியிலோ வாய்ப்பளித்து அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து, புதுச்சேரி பாஜக தலைவர் தேர்தலுக்கான பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தலைமையில் பாஜக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது நியமன எம்எல்ஏ-க்கள் வெங்கடேசன், அசோக் பாபு, வி.பி.ராமலிங்கம் ஆகியோரையும் அமைச்சர் சாய் சரவண குமாரையும் ராஜினாமா செய்ய நிர்மல் குமார் சுரானா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து பாஜக அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி பாஜக தலைவர் செல்வகணபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ஆகியோர் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து ராஜினாமா கடிதங்களை வழங்கினர். அவர்களை தொடர்ந்து அமைச்சர் சாய் சரவணக்குமாரும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சாய் சரவணக்குமார் ராஜினாமாவை துணை நிலை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாக கூறிய முதலமைச்சர் ரங்கசாமி, புதிய அமைச்சர் யார் என முடிவாகவில்லை என்றார். நியமன உறுப்பினர்களாக தீப்பாய்ந்தான், காரைக்கால் ராஜசேகர், முதலியார்பேட்டை செல்வம் ஆகியோரை பாஜக பரிந்துரை செய்துள்ளது. அதேநேரம் அமைச்சர் பதவிக்கு எம்எல்ஏ ஜான் குமார் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
June 28, 2025 7:21 AM IST


