கர்நாடக மாநிலத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு பேஸ்புக்கில் பழக்கமான பெண்ணைக் கொன்று பண்ணையில் புதைத்ததற்காக ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளர் புனீத் கவுடா, 28 வயதாகும் இவருக்கும் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த ஹோசகொப்பலு பகுதியைச் சேர்ந்த ப்ரீத்தி என்பவருக்கும் ஒரு வாரம் முன்பு தான் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளின் தாயான ப்ரீத்தி, இல்லத்தரசியாக வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரம் முன்பு தான் புனீத் கவுடா உடன் பேஸ்புக்கில் நட்பாகியிருக்கிறார்.
பேஸ்புக்கில் பேசிவந்த நிலையில், இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ள முடிவு செய்திருக்கின்றனர். திட்டமிட்டபடி, கடந்த சனிக்கிழமை தனது கணவருக்குத் தெரியாமல் புனீத்தைச் சந்திக்க தனியாக சென்றுள்ளார். ஹாசன் வந்த புனீத் தனது காரில் ப்ரீத்தியை மைசூருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு இருவரும் சில பகுதிகளில் சுற்றித் திரிந்தபின் ரூம் எடுத்துத் தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த சம்பவத்திற்குப் பின் ப்ரீத்தி வீடு திரும்பாத நிலையில், அவரைக் காணவில்லை என அவரின் கணவர் போலீஸில் புகார் அளித்திருக்கிறார். அதன்பேரில் விசாரித்தபோது ப்ரீத்தியின் மொபைல் போன் ஆனில் இருந்திருக்கிறது. அதற்குத் தொடர்புகொண்டபோது புனீத் பேசியிருக்கிறார். அதில் தனது வாடகை காரில் போனை ப்ரீத்தி மறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் ப்ரீத்தியின் போன் அழைப்புகளை ஆராய்ந்தபோது அவர் புனீத்தை பல முறை தொடர்பு கொண்டது தெரியவர, அவரை போலீஸார் வளைத்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தான் ப்ரீத்தியை புனீத் கொன்று பண்ணை வீட்டில் புதைத்து தெரியவந்திருக்கிறது. பின்னர், கட்டாரகட்டா பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் ப்ரீத்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ப்ரீத்தியின் கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணையில் புனீத் பகீர் தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது, கடந்த சனிக்கிழமை இருவரும் ரூமில் உல்லாசமாக இருந்தனராம். அப்போது உடலுறவை மேலும் தொடர தனக்கு ப்ரீத்தி பணம் கொடுத்தாக புனீத் கூறுகிறார். மேலும் தன்னுடன் தொடர்ந்து தங்க ப்ரீத்தி விருப்பம் தெரிவித்ததாகவும் கூறுகிறார்.
இது புனீத்துக்குப் பிடிக்காமல் போக இருவருக்கும் வாக்குவாதம் எழுந்ததாகவும், இது அப்படியே சண்டையாக மாற ப்ரீத்தியை கன்னத்தில் அறைந்ததாகவும், இதில் அவர் மயக்கம் அடைந்து கீழே விழ கல்லைத் தூக்கிப் போட்டு அவரை கொடூரமாக கொன்றதாக புனீத் போலீஸிடம் தெரிவித்திருக்கிறார்.
அதன்பின் சடலத்தை தனக்கு தெரிந்த பண்ணை வீட்டில் புதைத்திருக்கிறார். இதற்கிடையே, கொலை செய்யப்படுவதற்கு சரியாக ஏழு நாட்கள் முன்பு தான் இருவரும் பேஸ்புக்கில் பழக்கமாகியுள்ளனர் என்று கர்நாடக போலீஸ் தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு வாரத்தில் நேரில் முதல் சந்தித்துக்கொண்ட நிலையில் முதல் சந்திப்பில் கொலை செய்யும் அளவுக்கு நிலைமை சென்றிருக்கிறது என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
June 27, 2025 11:51 AM IST
ஒரு வாரம் முன்பு பேஸ்புக்கில் பழக்கம்.. முதல் சந்திப்பிலேயே பண்ணை வீட்டில் சடலமான பெண் – பகீர் சம்பவம்!

