Last Updated:
2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜக பங்கு வகிக்கும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். அதிமுக விவகாரங்களில் தலையிடவில்லை என்றும் கூறினார்.
2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாரதிய ஜனதா அங்கம் வகிக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க தான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். அக்கட்சி விவகாரங்களை அவர்களே முடிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்றும், அதில், பாரதிய ஜனதா கட்சியின் பங்கு இருக்கும் என்றும் அமித் ஷா சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற வினாவிற்கு, எடப்பாடி பழனிசாமி பெயரை கூறாமல், அதிமுக தலைமையின் கீழ் தாங்கள் போட்டியிடுவதால், அக்கட்சியை சேர்ந்தவர்களே முதலமைச்சர் ஆவார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் பாஜக வளர்ச்சி குறித்து நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, என் நம்பிக்கை என்னவென்றால், அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலுவான நிலையில் இருக்கிறது என்று அமித்ஷா பதில் அளித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் போதுமான நேரம் இருப்பதால், இன்னும் சில காலத்தில் அனைத்தும் தெளிவாகி விடும் என்றும் பதில் அளித்துள்ளார்.
கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை குறித்த கேள்விக்கு சர்வதேச நடைமுறைகளின் அடிப்படையில் என்ன செய்ய முடியும் என்பதைச் செய்வதுதான் எங்கள் நோக்கம் என்றும் பதில் அளித்தார்.
June 27, 2025 8:42 AM IST


