Last Updated:
சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக விமானப்படை கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.
இந்த ராக்கெட் 8 நிமிடங்களில் முதல் கட்டமான புவிவட்ட சுற்றுப்பாதையை எட்டியது. முதல் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது. இதையடுத்து ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு 41 ஆண்டுகள் கழித்து இரண்டாவது இந்தியராக விண்வெளிக்குச் சென்ற சுபான்ஷு சுக்லா, மூவர்ணக் கொடியுடன் பயணிப்பது குறித்து பெருமிதம் தெரிவித்தார்.
இந்நிலையில், பால்கன் ராக்கெட்டில் இருந்து பிரிந்து பயணிக்கும் ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்கலம், இன்று மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கும் பணி(டாக்கிங்) தொடர்ந்து நடைபெற்றது. இதையடுத்து சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு சுபான்ஷு சுக்லா குழுவினர் 14 நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்வர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இஸ்ரோவின் கனவுத்திட்டமான ககன்யானுக்கு சுபான்ஷு சுக்லாவின் இந்தப் பயணம் மிகுந்த பயனுடையதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
June 26, 2025 4:25 PM IST
சர்வதேச விண்வெளி நிலையத்துடன் ‘டிராகன்’ விண்கலம் வெற்றிகரமாக இணைந்தது.. விண்வெளியில் 14 நாட்கள் ஆய்வு!


