Last Updated:
கேப்டன்ஷிப் மாற்றம் நடந்திருக்கிறது. எனவே நல்ல ரிசல்ட் எதிர்பார்க்க வேண்டும் என்றால் அதற்கு சில காலம் ஆகும்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து முன்னாள் வீரர் கிரன் மோரே கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
371 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இங்கிலாந்து அணி சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் போட்டியிலேயே அவரது தலைமையிலான அணி தோல்வியடைந்திருக்கிறது.
இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து முன்னாள் வீரர் கிரன் மோரே அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
முதல் நான்கு நாட்களும் நாம் நன்றாகத்தான் விளையாடினோம். கடைசி நாளில் தான் நமக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே வித்தியாசம் ஏற்பட்டது. கடைசி நாளில் இங்கிலாந்து அணி மிகவும் சிறப்பாக விளையாடியது.
நாம் ஃபீல்டிங்கில் கோட்டை விட்டு விட்டோம். மிக எளிதான கேட்சுகளை நமது வீரர்கள் பிடிக்கத் தவறினர். இதுதான் மேட்ச்சின் போக்கை முற்றிலுமாக மாற்றியது. மேலும் முதல் இரண்டு நாட்களில் இந்திய அணியின் பேட்டிங் அற்புதமாக இருந்தது.
அப்போது நாம் கூடுதலாக 100 முதல் 150 ரன்கள் சேர்த்திருந்தால், ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கும். நம்முடைய அணி வலுவாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கேப்டன்ஷிப் மாற்றம் நடந்திருக்கிறது. எனவே நல்ல ரிசல்ட் எதிர்பார்க்க வேண்டும் என்றால் அதற்கு சில காலம் ஆகும். குறைந்தது ஓராண்டு ஆகும் என நான் கருதுகிறேன் என்று கிரன் மோரே தெரிவித்துள்ளார்
June 25, 2025 9:49 PM IST


