நாடு முழுவதும்2026ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியுள்ளதாக தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி அறிவித்துள்ளார்.
தேசிய தேர்வு முகமை நடத்தும் ஜேஇஇ முதன்மைத் தேர்வுபோல, சிபிஎஸ்இ நிர்வாகம், பத்து மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வையும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த பரிந்துரைத்திருந்த நிலையில், அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
அதன்படி, 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வழக்கம் போல பிப்ரவரி மாதம் ஒரு தேர்வும் அடுத்ததாக மே மாதம் ஒரு பொதுத் தேர்வும் நடைபெறும். இதில், பிப்ரவரி மாதம் நடைபெறும் முதல் பொதுத்தேர்வை மாணவர்கள் கண்டிப்பாக எழுத வேண்டும், ஆனால் இரண்டாம் தேர்வை மாணவர்கள் விரும்பினால் அல்லது தேவை இருந்தால் எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அறிவியல் உள்ளிட்ட உள்மதிப்பீடு (இன்டர்ன்) தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

