Last Updated:
SpaceX’s Dragon: இந்த ராக்கெட் 8 நிமிடங்களில் முதல் கட்டமான புவிவட்ட சுற்றுப்பாதையை எட்டியது. முதல் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய விமானப் படை வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்கள் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டனர்.
இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக விமானப்படை கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல ஆயத்தமாகினர். 6 முறை ஆக்சியம் திட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் 12.01 மணிக்கு, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் சுபான்ஷு சுக்லா குழுவினருடன் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.
இந்த ராக்கெட் 8 நிமிடங்களில் முதல் கட்டமான புவிவட்ட சுற்றுப்பாதையை எட்டியது. முதல் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது. இந்நிலையில், ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு 41 ஆண்டுகள் கழித்து இரண்டாவது இந்தியராக விண்வெளிக்குச் சென்ற சுபான்ஷு சுக்லா, மூவர்ணக் கொடியுடன் பயணிப்பது குறித்து பெருமிதம் தெரிவித்தார்.
தற்போது பால்கன் ராக்கெட்டில் இருந்து பிரிந்து பயணிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம், நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும். அங்கு சுபான்ஷு சுக்லா குழுவினர் 14 நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்வர். இஸ்ரோவின் கனவுத்திட்டமான ககன்யானுக்கு சுபான்ஷு சுக்லாவின் இந்தப் பயணம் மிகுந்த பயனுடையதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
June 25, 2025 1:15 PM IST
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலன்.. இந்தியர் சுபான்ஷூ சுக்லா உடன் 4 பேர் பயணம்!


