Last Updated:
அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஈரானின் அணு சக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது கடந்த 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் பதில் தாக்குதலையும் நடத்தி வருகிறது. இரு நாட்டு மோதலாக நீடித்துவந்த இதில், அமெரிக்கா தலையிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் இஸ்பகான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது. குண்டுகளை வீசித் தாக்கும் அதிநவீன பி-2 போர் விமானங்கள் ஈரானின் மூன்று அணு உலைகள் மீது குண்டுகளை வீசியுள்ளன. போர்டோ அணு உலை மீது சக்தி வாய்ந்த குண்டுகளை வீசியதாகவும், இதில், அந்த அணு உலை முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக அமெரிக்காவின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு அமெரிக்காவும் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
June 23, 2025 11:20 PM IST


