துணிச்சல், விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்போடு செய்யப்பட்ட சிகிச்சை என பீகார் மாநிலம் பெகுசராய் நகரில் உள்ள சதார் மருத்துவமனையில் பேரதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பல மருத்துவமனைகள் இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த நிலையில், வேறு வழியின்றி குழந்தைகளை ஏந்திக்கொண்டு அவநம்பிக்கையோடு எங்கள் மருத்துவமனைக்கு அக்குழந்தையின் தந்தை வருகை தந்ததாக பெகுசராய் சதார் மருத்துவமனையின் சிறப்பு பச்சிளங்குழந்தை பராமரிப்புப் பிரிவின் (SNCU) அதிகாரிகள் கூறுகின்றனர்.
இரட்டைக் குழந்தைகளில், ஒன்று வெறும் 700 கிராம் எடையும் மற்றொன்று சுமார் 800 கிராம் எடையுடன் இருந்தன. பாட்னாவைச் சேர்ந்த கோமல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கு இந்தக் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளன. பீகார் மாநிலத் தலைநகரில் உள்ள பல மருத்துவமனைகளின் மருத்துவர்கள், குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர்.
ஆனால், நம்பிக்கையை கைவிட மறுத்த குடும்பத்தினர், பெகுசராய் பகுதியில் பச்சிளங்குழந்தைகளின் பராமரிப்பில் உள்ளூர் மக்களால் பாராட்டப்படும் டாக்டர் கிருஷ்ணா குமாரைப் பற்றி கேள்விப்பட்டு, கடைசி முயற்சியாக 120 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்து குழந்தையை அவரிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். டாக்டர் குமாரின் நேரடி கண்காணிப்பில் SNCU-வில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். அவர் உடனடியாக தீவிர சிகிச்சையைத் தொடங்கினார். அனைத்து சாத்தியக்கூறுகளையும் மீறி, புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகளும் அவரது மருத்துவ சிகிச்சைக்கு பதிலளித்தன.
குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் கொண்டுவரப்பட்டிருந்தாலும், இப்போது உடனடி ஆபத்திலிருந்து மீண்டு, தாய்ப்பால் குடிக்கும் அளவிற்கு உடல்நலம் தேறியுள்ளதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். அடுத்த சில வாரங்கள் முக்கியமானவை. ஆனால், அறிகுறிகள் அனைத்தும் நன்றாகவே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
“24 வாரங்களில் பிறந்த குழந்தைகளைக் காப்பாற்றுவது சவாலான விஷயம்” என்று கூறும் டாக்டர் குமார், குழந்தைகள் மிகவும் குறைந்த எடையுடனும், வளர்ச்சியடையாத உறுப்புகளுடனும் வந்தனர். ஆனால், சரியான பராமரிப்பு மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு நம்பிக்கையை கொண்டுவந்துள்ளது என்றார்.
பீகாரின் நெருக்கடி நிறைந்த சுகாதார அமைப்பில் பெரும்பாலும் கவனிக்கப்படாத பெகுசாராயின் சதார் மருத்துவமனைக்கு இந்த சம்பவம் எதிர்பாராத கவனத்தை கொடுத்துள்ளது. பெற்றோர்களின் இடைவிடாத நம்பிக்கையையும், மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள பச்சிளங்குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் செய்யப்பட்ட முன்னேற்றங்களும் இந்த வெற்றியை பிரதிபலிக்கிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
“எல்லா மருத்துவமனைகளும் வாய்ப்பில்லை என்று எங்களிடம் கூறியபோது நாங்கள் உடைந்து போனோம். ஆனால், ஏதோ ஒன்று எங்களைத் தொடர்ந்து முயற்சிக்க வைத்தது. டாக்டர் கிருஷ்ண குமாரும் அவரது குழுவினரும் எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பைக் கொடுத்துள்ளனர்” என்று கண்ணீர் மல்க கூறுகிறார் இரட்டைக் குழந்தையின் தந்தை சுஷில் குமார். இரட்டைக் குழந்தைகள் இன்னும் சில வாரங்களுக்கு SNCU-வில் கண்காணிப்பில் இருப்பார்கள். எல்லாம் தொடர்ந்து நன்றாக இருந்தால், மூன்று மாத இறுதிக்குள் அவர்கள் முழு ஆரோக்கியம் அடைவார்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
June 23, 2025 7:15 PM IST

