ஜார்ஜ் டவுன்:
இணைய முதலீட்டு மோசடியில் சிக்கிக்கொண்ட பணி ஓய்வு பெற்ற 57 வயது ஆடவர் ஒருவர், சுமார் RM1.6 மில்லியனை இழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மத்திய செபெராங் பிறை வணிகக் குற்றப் புலனாய்வுத் துறைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து இந்த மோசடி குறித்து புகார் கிடைத்ததாக பினாங்கு காவல்துறைத் தலைவர் கமிஷனர் டத்தோ ஹம்சா அஹ்மட் கூறினார்.
“மார்ச் மாதத்தில், பாதிக்கப்பட்டவர் ஹாங்காங்கைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொள்ளும் ஒரு நபருடன் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டார்.
“மூன்று வாரங்கள் ஒருவரையொருவர் அறிந்த பிறகு, பாதிக்கப்பட்டவர் சந்தேக நபரை தனது வளர்ப்பு தம்பியாக எடுத்துக் கொண்டார்,” என்று அவர் திங்கட்கிழமை (ஜூன் 23) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பின்னர் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை FXCM எனப்படும் ஆன்லைன் முதலீட்டு தளத்தில் சேர அழைத்தார், இந்த முதலீடு மூலம் குறுகிய காலத்தில் 10% வருமானத்தை பெற்றுக்கொள்ளலாம் என உறுதியளித்தார். இதனால் ஈர்க்கப்பட்ட பாதிக்கப்பட்டவருக்கு, முதலில் ஒரு விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, உறுப்பினராகப் பதிவு செய்து, முதலீடு செய்யுமாறு கூறப்பட்டது.
அதற்கமைய பாதிக்கப்பட்டவர் மார்ச் 18 அன்று US$2,000 (RM8,716) ஆரம்ப முதலீடு செய்து, RM10,023 திரும்பப் பெற்றதாக ஹம்சா கூறினார்.
குறித்த முதலீடு முறையானது மற்றும் லாபகரமானது என்று அவர் நம்பியதால், பாதிக்கப்பட்டவர் ஜூன் 14 வரை 20 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் RM1,680,464 மதிப்புள்ள 36 பணப் பரிமாற்றங்களைச் செய்தார்.
பின்னர் அதனை மீள பெற முயன்றபோதுதான் அது ஒரு மோசடி என்பதை உணர்ந்ததாக அவர் கூறினார். மேலும் பணத்தை திரும்பப் பெறுவதைச் செயல்படுத்த கூடுதல் பணம் செலுத்துமாறு பாதிக்கப்பட்டவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக ஹம்சா கூறினார்.
ஆனால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த பாதிக்கப்பட்டவர், காவல்துறையில் புகார் அளித்தார்,” என்று அவர் கூறினார்.
மோசடி செய்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.
The post முதலீட்டு மோசடி: 57 வயது ஆடவருக்கு 1.6 மில்லியன் இழப்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

