Last Updated:
ஈரான் – இஸ்ரேல் இடையேயான மோதலில் ஈரான் முக்கிய நடவடிக்கைக்கு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கடுமையாக பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் மோதல் மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவதற்கும், அந்நாடு அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுவருவதே காரணம் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் உயர் தலைவர் கமேனி, “தாமதமின்றி நாம் செயல்பட வேண்டிய நேரம் இது. முதல் படியாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்த வேண்டும், அதே நேரத்தில் அமெரிக்க, பிரிட்டிஷ், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு கப்பல்களுக்கு ஹார்முஸ் நீர்வழித்தடத்தை மூட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஹார்முஸ் நீர்வழித்தடத்தை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற தேசிய பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மேஜர் ஜெனரல் கௌசாரி தெரிவித்துள்ளார். அதேசமயம், நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கிவிட்டாலும், இறுதி முடிவு எடுக்கும் இடத்தில் உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
இந்த ஹார்முஸ் நீர்வழித்தடத்தை ஈரான் மூடினால், இந்தியாவில் கடுமையான விலை உயர்வு இருக்கும். காரணம், சுமார் 20% உலக கச்சா எண்ணெய் வர்த்தகம் இந்த நீர்வழித்தடத்தின் வழியாக நடக்கிறது. அதேபோல், இயற்கை எரிவாயு 25% இந்த நீர்வழித்தடத்தில் தான் நடக்கிறது. எனவே இதனை ஈரான் மூடினால், உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கடுமையாக பாதிக்கப்பட்டு, விலைவாசி கடுமையாக உயரும். இதனால், இந்தியாவும் பெரும் பாதிப்பை சந்திக்கும்.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், அதன்மூலம், பெட்ரோல், டீசல் விலையும் உயரும். டீசல் விலை உயர்ந்தால், அதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணைமுட்டும் அளவிற்கு உயரும். இதனால், இந்தியாவில் கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்படும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
June 22, 2025 8:07 PM IST


