Last Updated:
அமெரிக்கா ஈரானில் 3 அணுசக்தி மையங்களை தாக்கியதை பல நாடுகள் கண்டித்துள்ளன.
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
ஈரானில் 3 முக்கிய அணுசக்தி மையங்களை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளது. இந்த தாக்குதலையடுத்து, ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியானுடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 45 நிமிட உரையாடலில் ஈரான் மீதான தற்போதைய தாக்குதல் குறித்து கவலை தெரிவித்ததாகவும், தற்போதைய நிலை குறித்து ஈரான் அதிபருடன் விவாதித்ததாகவும் எக்ஸ் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை மூலமாகவும், தூதரக அளவிலும் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இதனிடையே, ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை சீனா கண்டித்துள்ளது. ஐ.நா. மற்றும் சர்வதேச சட்டங்களை அமெரிக்கா மீறி இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
அதேபோல, மிகப்பெரிய பேரழிவுக்கான வழியை அமெரிக்கா திறந்துவிட்டுள்ளதாக ரஷ்யா கண்டித்துள்ளது. ஈரான் இறையாண்மை மீதான அமெரிக்காவின் தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது என சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் உலகுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்டோனியா குத்தரெஸ் எச்சரித்துள்ளார்.
ஓமன், ஈராக் உள்ளிட்ட நாடுகளும் ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள ஏமன் ராணுவம், அமெரிக்க கப்பல்கள் தங்கள் நாட்டு எல்லையை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், போர் தீர்வாக அமையாது என்றும் காயங்களை அதிகப்படுத்தும் என்றும் போப் 14ஆம் லியோ தெரிவித்துள்ளார். இதனிடையே, போர் சூழலுக்கு நடுவே ஆதரவு திரட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க மாஸ்கோ செல்வதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
June 23, 2025 8:12 AM IST


