பெங்களூரு: கடந்த நான்கு ஆண்டுகளாக விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த தியரி டெலாபோர்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதில் புதிய சிஇஓ ஆகவும், நிர்வாக இயக்குநராகவும் ஸ்ரீனிவாஸ் பாலியா நியமிக்கப்பட்டுள்ளார்.
தியரி டெலாபோர்ட் ராஜினாமாவைத் தொடர்ந்து உடனடியாக ஸ்ரீனிவாஸ் பாலியாவை புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அறிவித்த விப்ரோ நிர்வாகம், “கடந்த நான்கு ஆண்டுகளாக விப்ரோவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய தியரி, இந்த நிறுவனத்துக்கு வெளியே தனது கனவைத் தொடர இந்த பதவியிலிருந்து கீழறங்குகிறார்” என்று தெரிவித்துள்ளது.
புதிய சிஇஓ நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விப்ரோ தலைவர் ரிஷத் பிரேம்ஜி, “இந்த முக்கிய தருணத்தில் விப்ரோவை வழிநடத்த ஸ்ரீனிவாஸ் ஒரு சிறந்த தலைமையாக இருப்பார். கடந்த நான்கு ஆண்டுகளில், விப்ரோ மிகவும் சவாலான சூழல்களில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது.
ஸ்ரீனி இந்தப் பயணத்தின் ஒரு அங்கமாக இருந்துள்ளார். வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அணுகுமுறை, வளர்ச்சி மனப்பான்மை, வலுவான செயல்படுத்தல் கவனம் மற்றும் விப்ரோவின் மதிப்புகளுக்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவை வளர்ச்சி மற்றும் லாபத்தின் அடுத்த அத்தியாயத்தில் நாங்கள் நுழையும்போது அவரை சரியான பொருத்தமாக ஆக்குகின்றன” என்று தெரிவித்தார்.
புதிய தலைமைச் செயல் அதிகாரியாக பதவியேற்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீனிவாஸ் பாலியா, “லாபத்தையும் நோக்கத்தையும் இணைக்கும் அரிய நிறுவனங்களில் விப்ரோவும் ஒன்றாகும். மேலும் புகழ்பெற்ற இந்த நிறுவனத்தை வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்தார்.