Last Updated:
ஈரானின் அணு உலைகளை குறிவைத்து நடத்திய ஆபரேஷனுக்கு அமெரிக்கா வைத்துள்ள பெயர் என்ன தெரியுமா?
ஈரானின் அணு உலைகளை குறிவைத்து நடத்திய தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர், அதாவது நள்ளிரவு சுத்தியலடி’ என அமெரிக்கா பெயர் வைத்துள்ளது.
ஈரானில் 25 நிமிடம் நடத்திய தாக்குதல் குறித்து, கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் விளக்கம் தந்துள்ளார். அதன்படி, ஈரானுக்கு எதிரான அமெரிக்க ராணுவ நடவடிக்கையில் 7 B-2 குண்டுவீச்சு விமானங்கள், எரிபொருள் நிரப்பும் டேங்கர்கள், உளவு விமானங்கள், போர் விமானங்கள் உட்பட 125க்கும் மேற்பட்ட விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக விவரித்தார்.
முதலில் மாலை 5 மணியளவில் ஈரானில் உள்ள இஸ்பஹான் அணுசக்தி நிலையம் மீது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை மாலை 6.40 மணிக்கு வான்வழி தாக்குதல் தொடங்கப்பட்டதாக கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் விளக்கம் தந்தார்.
அதன்படி இஸ்பஹானில், டோமாஹாக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பார்டோ, நடான்ஸ் அணுமின் நிலையங்கள் மீது பி-2 விமானங்கள் மூலம் 14 பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும் விவரித்துள்ளார்.
மீதமுள்ள குண்டுவீச்சு விமானங்கள் பின்னர் தங்கள் இலக்குகளைத் தாக்கிவிட்டு, இரவு 7 மணிக்கெல்லாம் ஈரானை விட்டு பத்திரமாக வெளியேறி விட்டதாகவும், ஈரானுக்குள் நுழையும்போதோ அல்லது வெளியேறும்போதோ எந்த துப்பாக்கிச்சூடும் நடத்தப்படவில்லை என்றும் விளக்கம் தந்துள்ளார்.
மிசோரியில் உள்ள ஒரு தளத்திலிருந்து நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதல், 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு B2 ரக விமானங்கள் நிகழ்த்திய மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
June 22, 2025 10:13 PM IST
குறிவைக்கப்பட்ட அணு உலைகள்… ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ஆபரேஷனுக்கு என்ன பெயர் தெரியுமா?


