நேற்று இரவு, அமெரிக்கா ஈரானின் மூன்று அணுசக்தி திட்டப் பகுதிகளைத் தாக்கியுள்ளது. இது இஸ்ரேலுக்கு ஆதரவான செயலாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த செயலுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், ஈரானின் வெளியுறவுத் துறை கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
ஈரான் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானின் அணுசக்தி பகுதிகளைத் தாக்கி அமெரிக்கா ஆபத்தான போரைத் தொடங்கியுள்ளது. இது ராஜதந்திர முயற்சிகளைக் குலைத்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவது ஆகும். அமெரிக்காவின் இந்தத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள ஈரானுக்கு சட்ட ரீதியான உரிமை உள்ளது.

ஐ.நா சபை மற்றும் IAEA உள்ளிட்ட அதன் ஏஜென்சிகள், அமெரிக்காவின் இந்த சட்ட விரோதமான செயலை உடனடியாகக் கண்டிக்க வேண்டும்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக ஒரு அமர்வைக் கூட்டி, அமெரிக்காவிற்கு கடும் கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்”.
இஸ்ரேலுடன், அமெரிக்கா ஈரான் தாக்குதலில் இணைந்துள்ளது நிலைமையை மேலும் பதற்றமாக்கி உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளது.

