Last Updated:
ராணுவ ரீதியிலான மோதலுக்குப் பிறகு, இந்தியா தனது ராணுவ திறனை மேலும் வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது. நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
“ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு நம் நாடு பெரும் அடி கொடுத்தவிதம், அந்த நாட்டையே கிட்டத்தட்ட உலுக்கி விட்டது என்றே சொல்லலாம். பாகிஸ்தான் ராணுவமே முதலில் போர் நிறுத்தத்தை முன்னெடுக்கத் தொடங்கியது.
இந்த ராணுவ ரீதியிலான மோதலுக்குப் பிறகு, இந்தியா தனது ராணுவ திறனை மேலும் வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது. நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
இப்போது ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேட் இன் இந்தியா ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை (நவீன நடுத்தர போர் விமானம்) உருவாக்க இந்திய நிறுவனங்கள் முன்வர அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டமாகக் கருதப்படுகிறது. இதில், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் இணைந்து செயல்படும். இந்த நிறுவனங்கள் கூட்டாக நவீன ரக போர் விமானங்களை உருவாக்கும்.
தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த ஒப்புதலைத் தொடர்ந்து, விமான மேம்பாட்டு நிறுவனம், ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்கி உற்பத்தி செய்ய ஆர்வம் உள்ள இந்திய நிறுவனங்கள் வரலாம் என அழைப்பு விடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு எட்டு ஆண்டுகள் ஆகும்.
இந்திய நிறுவனங்கள் ஒற்றை நிறுவனம் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்து செயல்படும் கூட்டமைப்பு – இந்த பெரிய திட்டத்திற்கு ஏலம் எடுக்கலாம். எனினும், தொழில்நுட்ப ரீதியாக திறன் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே இதில் விண்ணப்பிக்க முடியும். 5-ஆம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கி 2030-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்திய விமானப்படையின் முக்கிய பகுதியாக அவற்றை மாற்ற அரசு இலக்கு வைத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு ‘Expression of Interest’ எனப்படும் EoI-ஐ வெளியிட்டுள்ளது. இதன் பொருள், எந்த நிறுவனங்கள் முன்வந்து இந்த போர் விமான தயாரிப்பில் ஆர்வம் காட்டுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள அரசு விரும்புகிறது. விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் AMCA-ன் வடிவமைப்பைப் புரிந்துகொண்டு அதை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளதை நிரூபிக்க வேண்டும். அவர்களுக்கு மேம்பாடு, பொறியியல், உற்பத்தி, உபகரணங்கள் மற்றும் சோதனை ஆகியவற்றில் அனுபவமும் இருக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அனுபவம் வாய்ந்த புகழ்பெற்ற இந்திய நிறுவனங்களை விமான மேம்பாட்டு நிறுவனம் (ADA) பட்டியலிடும். பட்டியலிடப்படும் நிறுவனம் தொடர் உற்பத்திக்கான உற்பத்தி ஆலையை அமைக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும் என்று EoI-ல் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்கும், வலுவான உள்நாட்டு விண்வெளி தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை வளர்க்கவும் கடந்த மே 27 அன்று, ராஜ்நாத் சிங் AMCA programme execution model-க்கு ஒப்புதல் அளித்தார். ADA, தொழில்துறை கூட்டாண்மை மூலம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. செயல்படுத்தல் மாதிரி அணுகுமுறை, போட்டி அடிப்படையில் தனியார் மற்றும் பொதுத் துறைகள் இரண்டிற்கும் சம வாய்ப்புகளை வழங்குகிறது.
June 21, 2025 8:47 AM IST
ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை இந்தியாவிலேயே உருவாக்க திட்டம்…! செயல்முறையை தொடங்கிய மத்திய அரசு…


