Last Updated:
உறவினர்கள் தன் பெயரில் இருக்கும் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் மோசடி வேலைகளில் ஈடுபட்டு தன்னை இறந்துவிட்டதாக அறிவித்திருப்பதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டினார்.
“சஹாப், நான் உயிருடன் இருக்கிறேன்” என்று எழுதப்பட்ட ஒரு காகிதத்தை ஏந்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் அங்கிருக்கும் பல்லியா (Ballia) மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் நீதி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாரதா தேவி என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்தப் பெண், உறவினர்கள் தன் பெயரில் இருக்கும் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் மோசடி வேலைகளில் ஈடுபட்டு தன்னை இறந்துவிட்டதாக அறிவித்திருப்பதாக குற்றம் சாட்டினார். தனது மறைந்த தந்தைக்கு ஒரே மகள் நான் தான் என்று கூறியுள்ள சாரதா தேவி, தனது தந்தை ராஜா ராம் சிங் இறப்பதற்கு முன்பு அவரது சொத்துக்கள் அனைத்தையும் சட்டப்பூர்வமாக தனக்கு உயில் எழுதி வைத்திருந்ததாக கூறினார். துவக்கத்தில் தனது தந்தை எழுதி வைத்தது போலவே உயில் நிறைவேற்றப்பட்டு, சொத்து தனது பெயருக்கு மாற்றப்பட்டதாகவும் சாரதா தேவி கூறியுள்ளார்.
ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு, தனது தந்தையின் மூத்த சகோதரரின் மகன்கள், தான் இறந்துவிட்டதாகக் காட்ட பதிவுகளில் மோசடியில் ஈடுபட்டு, சொத்து உரிமையை பறித்து தங்கள் பெயருக்கு நில ஆவணங்களை மாற்றி கொண்டதாக சாரதா தேவி குற்றம் சாட்டியுள்ளார். தாலுகா மட்டத்தில் தனக்கான நீதி கிடைக்க தான் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததால், மாவட்ட நீதிபதியின் தலையீட்டை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக சாரதா தேவி குறிப்பிட்டுள்ளார். “நான் உயிருடன்தான் இருக்கிறேன், ஆனால் என்னுடைய சொத்துக்களை அபகரிக்க சிலர் செய்த சூழ்ச்சியால் அரசாங்க பதிவேட்டின்படி நான் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறேன்” என்று கையால் எழுதப்பட்ட காகிதத்தை உயர்த்தி மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் அனைவரின் கவனத்தையும் சாரதா தேவி ஈர்த்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரான மங்கள பிரசாத் சிங் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு, துணை மாவட்ட நீதிபதி பைரியாவை விசாரணை அதிகாரியாக நியமித்துள்ளார். பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும் வகையில், மூன்று நாட்களுக்குள் விரிவான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே மாவட்ட நீதிபதியான ரவீந்திர குமார் சாரதா தேவி என்ற பெண் இந்த விஷயம் தொடர்பாக தன்னை அணுகியதை ஒப்புக்கொண்டார்.
அவரிடம் இருந்து புகார் பெறப்பட்டதையும் உறுதிப்படுத்தினார். மாவட்ட மாஜிஸ்திரேட்டின் கூற்றுப்படி, அந்தப் பெண் தனது தந்தை சொத்தை தனக்கு உயில் மூலம் வழங்கியதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தார், அதன்படி பிறழ்வு செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. முதல் பார்வையிலேயே புகார் சரியானதாகத் தோன்றுவதாகவும், இந்த விஷயத்தை முழுமையாக விசாரித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க துணைப் பிரிவு மாஜிஸ்திரேட்டுக்கு (SDM) உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சாரதா தேவி உயிருடன் இருக்கும் நிலையில் அவருக்கு எதிராக போலி இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு, அது சொத்துக்களை முறைகேடாக வேறு நபர்களின் பெயருக்கு மாற்ற பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டால், சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் உட்பட இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் மீது வழக்கும் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
June 21, 2025 10:47 AM IST
உயிரோடு இருக்கும் நிலையில், அரசாங்க பதிவேட்டில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண்…! என்ன காரணம் தெரியுமா…?


