Last Updated:
சர்வதேச யோகா தினத்தையொட்டி விசாகப்பட்டினத்தில் பிரதமர் நரேந்திர மோடி மூன்று லட்சம் பேருடன் யோகாசனம் செய்தார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்று லட்சம் பேருடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி யோகாசனம் செய்தார்.
11 ஆவது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவில் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா என்ற கருப்பொருளில் பல்வேறு நகரங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் ஆர்.கே. கடற்கரையில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், துணை முதலமைச்சர் பவன் கல்யாணும் நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து லட்சக்கணக்கானோருடன் சேர்ந்து பிரதமர் மோடி யோகாசனங்களை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், கடற்படையைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
முன்னதாக பேசிய பிரதமர் மோடி, யோகா ஒட்டுமொத்த உலகத்தையும் ஒன்றிணைப்பதாக பெருமிதம் தெரிவித்தார். யோகா என்பது வயது, மக்களின் பின்னணி என எந்த எல்லைக்கும் அப்பாற்பட்டு அனைவருக்கும் பொதுவானது என்றும் கூறினார்.
உலகம் முழுவதும் பதற்றம், அமைதியின்மை மற்றும் பல பிராந்தியங்களில் நிலையற்ற தன்மை அதிகரித்து வருவதாக பிரதமர் கவலை தெரிவித்தார். இதுபோன்ற சூழலில் யோகா அமைதிக்கான வழியை காட்டுவதாகவும் கூறினார். மனித வாழ்க்கையில் சமநிலையை ஏற்படுத்த யோகா முக்கிய கருவியாக இருப்பதாகக் கூறிய பிரதமர், மிகப்பெரிய மருத்துவ நிறுவனங்கள் கூட யோகா குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
June 21, 2025 9:42 AM IST
மூன்று லட்சம் பேருடன் யோகா செய்த பிரதமர் நரேந்திர மோடி..! மனித வாழ்க்கையில் சமநிலை ஏற்படுத்தும் கருவி என பேச்சு


