ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணைகளை தயாரிக்கும் பல்வேறு ஆலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதேபோன்று, தெஹ்ரானில் உள்ள ராணுவத் தலைமையகத்தை தாக்கி சேதப்படுத்தியதாகவும், இதில் கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. ஈரானின் 4 ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாகவும் இஸ்ரேல் வீடியோ வெளியிட்டுள்ளது.
அதே சமயம், இஸ்ரேலின் பீர்ஷிபா தொழில்நுட்ப பூங்கா மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில், மைக்ரோசாஃப்ட் அலுவலகம் சேதமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், கொத்து குண்டுகளை பயன்படுத்தி ஈரான் தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் வீசிய கொத்து குண்டு, தரைக்கு மேல் 7 கிலோமீட்டர் உயரத்தில் வெடித்துச் சிதறியதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. 8 கிலோமீட்டர் சுற்றளவில், 20 சிறிய குண்டுகள் வெடித்துச் சிதறியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. மத்திய இஸ்ரேலில் உள்ள அஸோர் (Azor) என்ற கிராமத்தில் வீடு ஒன்றின் மீது கொத்து குண்டு வெடித்துச் சிதறி சேதமடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கொத்து குண்டுகள் வீசுவது பெரும் சேதங்களையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. கிளஸ்டர் குண்டுகள் அல்லது கிளஸ்டர் வெடிமருந்துகள் என்று அழைக்கப்படும் இந்த வகை குண்டுகள், இலக்கைச் சென்று தாக்குவதற்கு முன், பரந்த பகுதியில் உபகுண்டுகளை வீசும்.
அந்த உபகுண்டுகள், தரையில் விழுந்த உடனோ, அல்லது சிறிது நேரத்திற்குப் பின்னரே வெடித்துச் சிதறும்… சில நேரங்களில் அவற்றில் பல குண்டுகள் வெடிக்காமல் கூட போகும். கீழே விழும் குண்டுகள் வருடக்கணக்கில் கூட வெடிக்காமல் அப்படியே இருக்கும். ஆனால், அவற்றை தொட்டுவிட்டால் உடனே வெடித்துச் சேதங்களை ஏற்படுத்தும். இதனால் இந்த கொத்து குண்டுகள் மக்களுக்கு பெரும் ஆபத்தாகவே பார்க்கப்படுகின்றன.
கொத்து குண்டுகளை, விமானங்களில் இருந்தும் ஏவலாம் அல்லது தரையிலிருந்தும் நேரடியாக ஏவலாம். இந்த குண்டுகளுக்கு தடை விதிக்க 2008- ஆம் ஆண்டு அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடைபெற்ற மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. 2010ஆம் ஆண்டு கொத்து குண்டுகளை பயன்படுத்தவோ, வடிவமைக்கவோ, தயாரிக்கவோ, வாங்கவோ, விற்கவோ தடை விதிக்கப்பட்டது.
2008 ஒப்பந்தத்தில், 111 நாடுகளும் 12 நிறுவனங்களும் கையெழுத்திட்டன. ஆனால், இஸ்ரேல், ஈரான், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய முக்கிய நாடுகள் ஒப்பந்தத்தில் இணையவில்லை. 2006-ம் ஆண்டு, லெபனான் போரின்போது, இஸ்ரேல் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியது. தற்போது நடைபெற்றுவரும் ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரிலும் கிளஸ்டர் குண்டுகளை ரஷ்யா பயன்படுத்தி வருகின்றது.
2009- ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது, இலங்கை ராணுவம் கொத்து குண்டுகளை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள கிளிநொச்சியில் புது குடியிருப்புப் பகுதியில் கொத்து குண்டுகளை வீசியதாக கூறப்பட்டது. இதனை இலங்கை தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், 2016- ஆம் ஆண்டு புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. பின்னர் 2018- ஆம் ஆண்டு, கொத்து குண்டுகளுக்கு எதிரான மாநாட்டில் இலங்கை இணைந்தது.
June 21, 2025 7:31 AM IST

