ஈரானிலும் – இஸ்ரேலிலும் தொடர்ந்து குண்டுமழைப் பொழிகிறது. இதில் அதிகளவில் பாதிக்கப்படுவது இருதரப்பிலிருந்தும் அப்பாவி மக்கள்தான். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என எந்த நாடும் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூடத் தெரியவில்லை. அதேநேரம் இந்தப் போரின் நோக்கமும் பேராபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. ஆம், அது அணு ஆயுதம்.
Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT) தரவுகளின்படி 90 அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இஸ்ரேல், `எங்களின் பக்கத்து நாடான ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது. அது எங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக மாறுகிறது” என்றக் குற்றச்சாட்டுடன், ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது.
இன்று 7-வது நாளாக இரு நாடுகளும் அணு ஆயுதம் என்ற ஒற்றைக் கொம்பை பிடித்துக்கொண்டு சொந்த நாட்டின் மக்களை, அவர்களின் உடமைகளை பலிகொடுத்துக்கொண்டிருக்கிறது.

ஒருபுறம் குண்டுமழை என்றால் மற்றொருபுறம் அணு ஆயுதம் இருக்கும் இடங்கள் தாக்கப்படுவதால் ஏற்படும் பேராபத்தையும் உலக நாடுகள் கவனித்து வருகிறது. சமீபத்தில் ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த கவலைகள் அதிகரித்திருக்கிறது.
சர்வதேச அணுசக்தி நிறுவன (IAEA) இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி, நடான்ஸின் எரிபொருள் செறிவூட்டல் ஆலையின் மேல் பகுதி அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலும், “அங்கு 60 சதவீதம் வரை இருந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம், அந்தத் தளத்திற்குள் இரசாயன மற்றும் கதிரியக்க மாசுபாட்டை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம், வெளிப்புற கதிர்வீச்சு அளவுகளில் மாற்றமில்லை. எனவே, சுற்றியுள்ள சூழலுக்கும் எந்த அச்சுறுத்தலும் தற்போது ஏற்படவில்லை’ என்றத் தகவலையும் தெரிவித்திருக்கிறார்.

