இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒற்றைச் செய்தியால் கைலாசாவே கதிகலங்கிப் போன நிலையில், நித்தியானந்தாவே தான் உயிரோடு தான் இருக்கேனா என்று சந்தேகம் கிளப்பும் வகையில் பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோக்குமாக்கு சாமியாரின் கோமாளித்தனத்தால் அவ்வப்போது சர்ச்சை எழுந்த நிலையில் நேரலையில் வந்தவர், சிலபஸ் கவர் பண்ணி முடிக்காமல் எக்ஸாமுக்கு போற ஸ்டூடண்ட் மாதிரி உட்கார்ந்திருப்பதாக கூறி அமளிதுமளி செய்தார். இந்த சூழலில் அவர் உருவாக்கியதாக கூறப்படும் கைலாசாவுக்கு வழி எங்கே உள்ளது என்று நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கின் பின்னணி என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
மதுரை ஆதீனம் என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு சைவ சமய மடமாகும். இது ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மடத்தின் 292 ஆவது பீடாபதியாக இருந்த அருணகிரிநாதர், கடந்த 2012 ஆம் ஆண்டு நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதும் அந்த முடிவில் இருந்து அருணகிரிநாதர் பின் வாங்கினார். இருந்தபோதும், ஒரு பக்தராக கூட நித்தியானந்தா மதுரை ஆதினத்திற்குள் நுழையக் கூடாது என்று ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு தாக்கல் செய்த இந்த மனுவில், மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனிடையே, பாலியல் மற்றும் கடத்தல் வழக்குகளில் சிக்கி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சர்ச்சை சாமியார் நித்தியானந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு தப்பி ஓடினார். அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அங்கு குடியேற இந்துக்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஈக்வடார் அருகே உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி அவர் அந்த தீவுக்கு கைலாசா நாடு என பெயரிட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. மேலும், கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், தனி நாணயங்கள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தியதோடு கைலாசா நாட்டுக்கான சர்வதேச தூதர்களையும் அறிவித்தார்.
இந்நிலையில், மதுரை ஆதினத்திற்குள் ஒரு பக்தராக நித்யானந்தாவை நியமிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் தங்களது தரப்பில் புதிதாக வழக்கறிஞரை நியமிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவரின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளீட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியானந்தாவின் பிரதிநிதியாக வந்த அவரது சீடர் அர்ச்சனாவிடம் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர்.
அதில், தலைமறைவாக உள்ள நித்யானந்தா எங்கு உள்ளார்? எனவும், கைலாசா நாடு எங்கு உள்ளது? அந்த நாட்டிற்கு எப்படி செல்வது? என்றும் கேட்டனர். நீங்கள் கைலாசாவுக்கு சென்று வந்து உள்ளீர்களா என பெண் சீடரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அங்கு செல்வதற்கு பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை உண்டா? எனவும் வினவினர். அதற்கு பதிலளித்த நித்தியானந்தாவின் பெண் சீடர் அரச்சனா, ஆஸ்திரேலியா அருகில் யுனைடெட் ஸ்டேட் ஆஃப் கைலாசா உள்ளதாகவும், அந்த நாட்டில் தான் நித்தியானந்தா தங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், கைலாசாவிற்கு ஐநா சபையில் அங்கீகாரம் பெறப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மதுரை ஆதின மடத்தில் நிதியானந்தாவை அனுமதிப்பது தொடர்பான வழக்கில், தங்களது சார்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
June 19, 2025 5:46 PM IST
நித்தியானந்தா இந்த நாட்டில் தான் இருக்கிறார்.. கைலாசா நாடு குறித்தும் பெண் சீடர் அளித்த பரபரப்பு தகவல்கள்!

