Last Updated:
பந்தை சேதப்படுத்தியதாக அஷ்வின் மீது மதுரை அணி குற்றம்சாட்டிய நிலையில் டிஎன்பிஎல் நிர்வாகம்
திண்டுக்கல் டிராகன் அணியின் கேப்டன் அஸ்வின் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டிய மதுரை அணி அதற்கான ஆதாரங்களை இன்று மாலைக்குள் வழங்கத் தவறினால் தடை விதிக்கப்படும் என்று டிஎன்பிஎல் நிர்வாகம் கெடு விதித்துள்ளது.
டிஎன்பிஎல் தொடரில் கடந்த 14 ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன் அணிகள் மோதின. இதில், நடப்பு சாம்பியனான மதுரை அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த ஆட்டத்தின் போது அஸ்வின் உள்ளிட்ட திண்டுக்கல் அணி வீரர்கள் பயன்படுத்திய கைக்குட்டையில் ரசாயனம் இருந்ததாகவும், அதைக் கொண்டு பந்தை சேதப்படுத்தியதாகவும் மதுரை அணி குற்றஞ்சாட்டியது.
இதுபற்றி மதுரை அணி முறையாக புகார் அளிக்காத நிலையிலும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் விதமாக டிஎன்பிஎல் நிர்வாகம் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், திண்டுக்கல் அணி பந்தை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்றும் பந்தை சேதப்படுத்தியதற்கான ஆதாரம் இருந்தால் இன்று மாலை 3 மணிக்குள் வழங்குமாறும் டிஎன்பிஎல் நிர்வாகம் கூறியுள்ளது.
திண்டுக்கல் அணியினர் பயன்படுத்திய கைக்குட்டை டிஎன்பிஎல் நிர்வாகத்தால் வழங்கப்பட்டவை என்றும் அவை இரண்டு அணிகளுக்கும் சமமாக வழங்கப்பட்டதாகவும் டிஎன்பிஎல் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. விதிகளின்படி போட்டி முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் மதுரை அணி புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் அணி பந்தை சேதப்படுத்தியதற்கான ஆதாரங்களை வழங்கத் தவறினால் விதிகளின்படி மதுரை அணிக்கு தடை விதிக்கப்படும் என்றும் டிஎன்பிஎல் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
June 17, 2025 12:35 PM IST


