உத்தரப் பிரதேசத்தில் பெட்ரோல் நிலைய ஊழியருக்கு பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரில் எரிவாயு (கேஸ்) நிரப்பும்போது பாதுகாப்பு கருதி காரில் இருப்பவர்களை இறக்கக் கோரியதால், பெட்ரோல் நிலைய ஊழியரை தகாத வார்த்தை கூறி அப்பெண் மிரட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்திற்குட்பட்ட பில்கிராம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், காரில் வந்த குடும்பத்தினர் எரிவாயு நிரப்ப வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
எரிவாயு நிரப்பும்போது காரில் உள்ள அனைவரும் இறங்க வேண்டும் என பெட்ரோல் நிலைய ஊழியர் ரஜ்னேஷ் குமார் கோரியுள்ளார். ஆனால், காரில் வந்தவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். காரை இயக்கிவந்தவர் ரஜ்னேஷை தள்ளிவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

