கர்நாடகத்தின் கடக் அருகேயுள்ள நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதுஸ்ரீ அங்காடி. அவருக்கு வயது 26. அதே கிரமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் ஹையர்மாத்(28). இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவரவே. அவர்கள் இதனை கண்டித்துள்ளனர். அதன்பின் அந்த பெண்ணை கடக்கில் இருக்கும் தங்கள் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்க வைத்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி அந்த பெண் வீட்டைவிட்டு வெளியேறி தலைமறைவானார். இது குறித்து இளம்பெண்ணின் வீட்டார் காவல் துறையிடம் புகாரளித்தனர்.
மாயமான அந்த இளம்பெண் தனது காதலருடன் சேர்ந்து அவருடைய பைக்கில் இளைஞருக்கு தெரிந்த பண்ணை வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அவர்கள் இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மதுஸ்ரீ சதீஷிடம் வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் அந்த பெண்ணின் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டார்.
அதன்பின் யாருக்கும் தெரியாமல் அவரது உடலை எடுத்துக்கொண்டு ஆள் நடமாட்டமில்லாத ஒரு பகுதியில் புதைத்துவிட்டார். மேலும், தனக்கும் இந்த சம்பவத்துக்கும் சம்பந்தமில்லாதது போல வெளியில் நடமாடியுள்ளார். அதன்பின் அவர் ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.

